"அதிமுகவை காப்பேன்.." விளக்கேற்றி, உறுதிமொழி எடுக்க வேண்டும்.. இபிஎஸ்-ஓபிஎஸ் அதிரடி அறிக்கை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அனைத்து வியூகங்களையும் கையில் எடுத்துள்ளனர்.
வரும் 24ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளாகும். அன்றைய தினத்தை முன்வைத்து, கட்சியினரை ஒருங்கிணைக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
சசிகலா வருகையால், கட்சிக்குள் எந்த சலசலப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டணி இதுவரை அதில் வெற்றி கண்டுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாள்
தொண்டர்களை ஒருங்கிணைக்கவும், ஜெயலலிதாவின் கட்சி இதுதான் என்பதை அவர்களுக்கு மனதில் பதிய வைக்கவும், ஜனவரி 24ம் தேதியை, பயன்படுத்திக் கொள்ளப்போகிறது அதிமுக தலைமை. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் அதையே பிரதிபலிக்கிறது.
அதிமுகவை காப்பேன்
இதோ கடிதத்தின் வரிகள்: ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து, 'அ.தி.மு.க.வை காப்பேன்' என உறுதிமொழி ஏற்க வேண்டும். இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையைச் சந்திக்க உள்ளோம்.
வசியப்படுத்த முடியாது
அ.தி.மு.க.வை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் மக்களுக்குதான் இயக்கம் சொந்தம். அ.தி.மு.க.வை விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசிப்படுத்தியோ வாங்க முடியாது. நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருக்கிறார்கள்.
எதிரிகளும், துரோகிகளும்
எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்து எப்படியாவது நம் படையை வீழ்த்த தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். எதிரிகளுக்கு நம் உழைப்பால், உத்வேகத்தால், ஒற்றுமையால் மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தைக் கற்பிக்க வேண்டும். மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் மக்கள் விரோதிகளைத் தோற்கடிக்க வேண்டும். வரும் தேர்தலில் வெற்றி பெற்று, எதிரிகளை வீழ்த்திக் கோட்டையில் நம் கொடியைப் பறக்கச் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்சியினரை ஒருங்கிணைக்க திட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அனைத்து வியூகங்களையும் கையில் எடுத்துள்ளனர். வரும் 24ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளாகும். அன்றைய தினத்தை முன்வைத்து, கட்சியினரை ஒருங்கிணைக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.