சீமைச்சாமி அண்ணனை மறக்க முடியுமா? ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி மறைவு பற்றி பூங்குன்றன் உருக்கம்!
சென்னை : ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய சீமைச்சாமி மறைவையடுத்து, அவர் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் சீமைச்சாமி. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக, அதிமுக வட்டாரத்தினர் நன்கறிந்த சீமைச்சாமி ஓரிரு நாட்களுக்கு முன்பு காலமானார்.
சீமைச்சாமியின் பணி பற்றி ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு:
ஜெயலலிதா நினைவுநாள் டிசம்பர் 4? டிசம்பர் 5? ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையால் குழப்பத்தில் அதிமுக!
சீமைச்சாமி
"நான் பார்த்து பழகிய மனிதர்களில் இவருக்கு என் இதயத்தில் என்றுமே தனி இடம் உண்டு. அன்பு நிறைந்தவர். ஆற்றல் மிகுந்தவர். அண்ணா என்று பலரை அழைத்தாலும் இவரை 'சீமைச்சாமி அண்ணா' என்று அழைக்கும் போது மட்டுமே உள்ளத்தில் உவகை கூடும். அப்படி இன்று அன்போடு அழைக்க அவர் இல்லையே! வேதா இல்லத்திற்கு வந்த யாராக இருந்தாலும் இவரின் அன்பில் இருந்து தப்பித்திருக்க முடியாது. ஜெயலலிதாவோடு பயணித்தவர்கள் யாராலும் இவருடைய மறவை ஏற்றுக் கொள்ள முடியாது. மனதில் எந்தவித களங்கமும் இல்லாமல் இயல்பாகப் பழகக் கூடியவர். அன்போடு அறிவுரை சொல்லக்கூடியவர்.
ஏழ்மையான கட்சியினர் வந்துவிட்டால்
ஏழ்மையான கழகத்தினர் வந்துவிட்டால் அவர்களை அழைத்து வந்து, அவர்கள் செல்லும் வரை இவர் கவனிக்கும் விதமே தனி. இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். சீமைச்சாமி அவர்களுடன் பழகியவர்களுக்குத் தான் அந்த உயர்ந்த உள்ளத்தின் மகத்துவம் புரியும். ஜெயலலிதாவின் பணியாளர்களுக்கு இவரின் இழப்பு பேரிழப்பு. இன்று நீயில்லாமல் நாங்கள் பிரிந்து கிடக்கிறோம் தாயே! நீ தந்த உறவுகளை விட்டு தள்ளி நிற்கிறேன் தாயே!
கொள்கைக் குடும்பம்
கழகத்தின் மீது மிகுந்த பாசம் கொண்ட குடும்பம். கழகத்திற்காக எதையும் செய்யத் துடிக்கும் குடும்பம். சீமையின் அண்ணன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தமிழரசன், நெடுங்காலம் அம்மா பேரவைச் செயலாளர். அவருடைய தம்பி பொன்னுச்சாமி மேலூர் ஒன்றியக் கழகச் செயலாளர். என் தம்பியைப் போல் கட்சியை நேசிக்க யாரும் இல்லை என்று சீமைச்சாமி அண்ணனே என்னிடம் தெரிவித்திருக்கிறார். அப்படி கழகத்தின் மீது வெறிபிடித்த கொள்கை குடும்பம். கழகத்தை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக பாவித்த அண்ணனின் மறைவு கழகத்திற்கும் பேரிழப்பு.
ஓடிக்கொண்டே இருந்தவர்
உதவி ஆய்வாளராக இருந்தாலும், உயர் அதிகாரிகள் கூட இவர் மீது மிகுந்த அன்பு செலுத்துவார்கள். மரியாதை கொண்டிருப்பார்கள். காரணம் அவர்கள் பயிற்சி பெறும் போது இவர் தான் பயிற்றுநராக அவர்களை பயிற்றுவித்திருக்கிறார். எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றவர். ஜெயலலிதாவின் பாதுகாப்பு படையில் ஆரம்பம் முதல் கடைசிவரை ஓடிக்கொண்டே இருந்தவர். இவர் ஒடும் ஓட்டம் பார்ப்பவரையும் ஓட வைக்கும். எப்படி களைப்பில்லாமல் ஓடுகிறார் என்று எண்ண வைக்கும். உடன் இருப்பவர்களையும் உற்சாகத்தோடு ஓட வைக்கும். கடமைமிக்க இவரின் இழப்பு காவல் துறைக்கும் பேரிழப்பு.
கை நடுங்கி நிற்கிறது
இவரைப் பற்றி எழுதும்போது என் எண்ணங்கள் விரிந்து கொண்டே செல்கின்றன. நாங்கள் அம்மாவோடு பயணித்த தருணங்களை நினைக்க நினைக்க மனம் மரத்துப் போகிறது. மேலும் எழுத முடியாமல் கை நடுங்கி நிற்கிறது. அண்ணன் சீமைசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.