மெரூன் கலர் பெட்டி.. ஜெ. ஸ்டிக்கர்... காலில் செருப்பு புது அடிஷன்.. ஓபிஎஸ்-சின் அசத்தல் என்ட்ரி
ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டி பட்ஜெட் சூட்கேசுடன் ஓ.பி.எஸ். நுழைந்தார்.
Recommended Video
சென்னை: பட்ஜெட் பெட்டியில் வழக்கம் போல அம்மா ஸ்டிக்கர் சகிதம் இந்த வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
காலங்காலமாக பட்ஜெட் தாக்கல் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் இப்போது இருப்பது போலவெல்லாம் அப்போது இல்லை.
பாதுகாப்பான முறையில் அதேசமயம் அமைதியாக பெட்டியில் அறிக்கையை கொண்டு வந்து வைத்து வாசிக்கும்போதுதான் தமிழக மக்கள் அனைவரும் ரேடியோவில் பட்ஜெட் பற்றின விவரங்களை காதை தீட்டி வைத்து கொண்டு கேட்பார்கள். மறுநாள் நாளிதழ்களில் தங்கள் தொகுதிக்கு ஏதாவது நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை கூர்ந்து படிப்பார்கள்.
பிள்ளையார் சுழி
ஆனால் இன்றோ, பட்ஜெட் பெட்டியை எடுத்து வருவதே ஒரு பரபரப்பாகி விட்டது. இதற்கு பிள்ளையார்சுழி போட்டு வைத்தது ஓ.பன்னீர்செல்வமேதான். பட்ஜெட் சூட்கேசில் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்ட ஆரம்பித்தது இவர்தான்.
கலர் கலர் பெட்டி
ஜெயலலிதாவுக்கு பச்சை கலர், மெரூன் கலர் என சென்ட்டிமென்ட்டாக கலர்கள் மாறும். அதற்கேற்றவாறு பட்ஜெட் பெட்டியும் பச்சை கலர், புளூ கலர் என இதுவரை வந்திருக்கிறது. இப்போது மெரூன் கலரில் ஜெ.ஸ்டிக்கர் சிரித்தபடி உள்ளது.
ஜெ.ஸ்டிக்கர்
2015-16-பட்ஜெட்டின்போது மட்டும் ரொம்ப ரொம்ப அமைதியாக, எந்த விளம்பரமும் இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஏனென்றால் ஜெயலலிதா அப்போது சிறையில் இருந்தார். பிறகு விடுதலையானவுடன் இடைக்கால பட்ஜெட் வந்தவுடன், திரும்பவும் பெட்டியில் ஜெ.ஸ்டிக்கர்தான்.
செருப்பு இல்லை
இன்னொரு விஷயம் ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் கவனிக்க ஆரம்பித்ததே ஜெயலலிதாவிடம் அவர் காட்டிய பணிவும் மரியாதையும்தான். எப்போதெல்லாம் பட்ஜெட் தாக்கல் செய்கிறாரோ அப்போதெல்லாம் காலில் செருப்புக்கூட போடாமல் வரும் அளவுக்கு மரியாதை வைத்துள்ளவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.
காலில் செருப்பு
இதுவரை பட்ஜெட் தாக்கலின்போது அவர் காலில் செருப்பு போடாமலேயே வந்ததை எத்தனை பேர் கவனித்திருப்பார்களோ தெரியாது. ஆனால் இந்த முறை செருப்புடன்தான் ஓ.பன்னீர்செல்வம் வந்திருக்கிறார். ஆனால் முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தி விட்டே வந்தார்.