ஒரு விஷயம் கவனிச்சீங்களா.. அம்மா சமாதி பக்கம் ஒருத்தர் கூட போகலை பாருங்க!
சில மாதங்களாகவே ஜெயலலிதா சமாதி பக்கம் அதிமுக தலைவர்கள் செல்லாமல் உள்ளனர்.
சென்னை: எல்லாம் சரி.. ஒரு விஷயம் கவனிச்சீங்களா? அம்மாவின் ஆட்சிதான் நடக்கிறது என்று சொல்பவர்கள் யாருமே இப்பவெல்லாம் சமாதி பக்கம் போகாம இருக்காங்களே.. ஏன்?
ஜெயலலிதா இறந்த சமயத்தில், திடீர் திடீரென சமாதியில் போய் அதிமுக புள்ளிகள் உட்கார்ந்து கொள்வார்கள். ஒரு சின்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி, யாராவது அங்கே போய் அமர்வது என்பது சாதாரணமாக நடந்து வந்தது.
அதேபோல ஒரு முக்கிய அறிவிப்பு என்றாலும் பீச்சுக்கு போய்விட்டுதான் அறிவிப்பார்கள். அது தர்மயுத்தமாக இருந்தாலும் சரி, ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்ற ரீதியில் சத்தியம் பண்ணாலும் சரி, அதிமுகவுக்கு ஆதரவு என தீபா முதல் யார் அறிவித்தாலும் சரி.. எல்லாமே அந்த சமாதியில் வட்டமடித்த பிறகுதான் நடக்கும்.
மோடிக்கு வடக்கே வாய்ஸ் இருக்கலாம்.. தெற்கில் என்ன நிலவரம்?... சர்வே முடிவுகள்
மிஸ்ஸிங்!
ஆனால் இப்போதெல்லாம் இந்த சம்பவங்கள் எல்லாம் மிஸ்ஸிங்! அம்மாவின் பிறந்த நாள், இறந்த நாளுக்கு சமாதிக்கு சென்று மரியாதை செலுத்துவது என்பது சம்பிரதாயம்.. கட்டாயம்.. கட்சியின் கடமையும்கூட! அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்பவர்கள், அதுவும் அம்மா மறைந்தபிறகு முதன்முறையாக ஒரு தேர்தலை சந்திப்பவர்கள் ஏன் இப்போது சமாதி பக்கம் செல்வதில்லை என்பதுதான் கேள்வியாக உள்ளது.
ஏன் செல்லவில்லை?
இப்போதுதான் பிரச்சாரம் டைம்.. யாருக்கும் நேரம் இருக்காது.. சரி.. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதும், கூட்டணி விஷயம் முடிவான போதும், வேட்பாளர்கள் பட்டியல் தயார் ஆன போதும், பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பும்.. எதுக்குமே சமாதி பக்கம் வரவே இல்லையே ஏன்? இவர்கள்தான் இப்படி என்றால், கூட்டணி கட்சிக்காரர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள்!
சென்டிமென்ட்
அன்று ஜெயலலிதா இருந்தபோது, வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் குறித்து தருவார். தன் கூட்டணி கட்சிகாரர்களையும் அதே நேரத்தில்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய சொல்லி உத்தரவிடுவார். அதுபோல இப்போதுள்ளவர்கள் யாருமே சென்டிமென்ட் சமாச்சாரம் பார்க்கவில்லை என்றால் கூட பரவாயில்லை..
பீச் பக்கம் வரவில்லை
வேட்புமனு தாக்கல் செய்வதில் இருந்து நேரம், காலம் பார்த்துதான் எல்லாமே நடக்கிறது. அதுவும் ஒருத்தர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரு மணி நேரம்தான் கெடு வைத்து பரபரப்பையே ஏற்படுத்தினார். அவரைகூட பீச் பக்கம் காணோம்! சமாதிக்கு சென்றால் சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகாது என்று நினைத்து விட்டார்களா என தெரியவில்லை.
என்ன நினைப்பார்கள்?
ஏனெனில் அங்கு சென்றுவந்தவர்கள் சிலருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதாகவும், இழப்புகள் ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் ஜெ. இறந்த ஒரு வருடத்திற்கு தீயாக பரவியது. அதனால்தான் இப்படி முடிவெடுத்து இருக்கிறார்களா என தெரியவில்லை.. ஆனால் சீனியர்களே இப்படி இருந்தால், கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.
அம்மா பாவம்
ஆனால் ஒன்று... பகுத்தறிவு.. பகுத்தறிவு என்று அன்று பேசியவர்கள்தான் இன்று பீச்சில் உள்ள இன்னொரு சமாதிக்கு நிறைய முறை சென்று கொண்டிருக்கிறார்கள்! அம்மா பாவம்தான்!