இஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு
சென்னை: அதிமுகவில் நிர்வாக வசதிக்காக புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன்.
மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் வேண்டியவர்களுக்கு ஒன்று வேண்டாதவர்களுக்கு ஒன்று என்பது வேதனையைத் தான் தரும் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், இஷ்டத்திற்கு பிரிக்க அதிமுக ஒன்றும் உங்களுடைய சொத்து அல்ல எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;
மாடு வாங்க பணம் இல்லை.. மகள்களையே மாடாக பூட்டி ஏர் உழுத ஆந்திர விவசாயிக்கு உதவும் நடிகர் சோனு சூட்!
பிரிப்பு இனிப்பா
''கழகத்தில் மாவட்டங்களை பிரித்துள்ளது எதற்காக என்று நெடுநேரம் யோசித்தேன். நிர்வாக வசதிக்காக பிரித்து இருப்பார்களோ?என்று பட்டியலைப் பார்த்தேன். எதற்காக இப்படி பிரித்து இருக்கிறார்கள் என்று ஆழ்ந்து சிந்தித்தேன். கடைசிவரை எனக்கு விளங்கவில்லை. மூன்று தொகுதிகளாக பிரிக்கிறார்களா? அல்லது இரண்டு தொகுதிகளாக பிரிக்கிறார்களா? இல்லை அமைச்சர்களுக்கு அதிக தொகுதிகள் மற்றவர்களுக்கு குறைவான தொகுதிகள் என்று பிரிக்கிறார்களா? இல்லை வசதியானவர்களுக்கு அதிகமான தொகுதிகள் வசதி குறைந்தவர்களுக்கு குறைவான தொகுதிகள் என்று பிரிக்கிறார்களா? இல்லை பலருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரிக்கிறார்களா? இப்படி எதற்காக பிரிக்கிறார்கள் என்று யோசித்தேன். கடைசி வரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள்.
பங்காளிச் சண்டை
பிரித்தது புரியவில்லை என்றால் இணைத்திருக்கும் தொகுதிகள் எல்லாம் பக்கத்தில் வருகின்றனவா? மாநகரில் இருப்பவர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரா! அடுத்த மாவட்டத்திலுள்ள தொகுதி மற்ற மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறதா! திருவள்ளுர் மாவட்டம் ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட கழகச் செயலாளர். இதைப் பார்க்கும்போது பங்காளிச் சண்டையில் குடும்பச் சொத்தைப் பிரிப்பது போலவே இருக்கிறது.
வளர்ச்சி தருமா?
சிலர் மிரட்டியே வாங்கி இருப்பார்களோ? தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக பிரிக்க வேண்டும், இப்படி ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் பிரித்து இருப்பதைப் பார்க்கும் போது, கட்சிக்காக நாம் என்ற நிலை மாறி நமக்காக கட்சி என்ற நிலை வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. இது கழகத்திற்கு நன்மையைச் செய்யுமா? வளர்ச்சியை தருமா? போக போகத் தெரியும். புரியும்.
தொண்டர்களின் சொத்து
திருப்திப்படுத்தவே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறதோ? தங்களுடைய இஷ்டப்படி பிரித்துக் கொள்வதற்கு இது ஒன்றும் உங்களுடைய சொத்து அல்ல, தொண்டர்களின் சொத்து என்பதை மறந்துவிட்டீர்கள் என்பதையே இந்த பிரிவினை காட்டுகிறது. தவறுக்கு மேல் தவறு செய்து எதிரிக்கு வழி விட்டு விடாதீர்கள். பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுங்கள்.
கட்சி நலன் முக்கியம்
உங்கள் நடவடிக்கை கட்சியின் நலனுக்காக இருக்க வேண்டும் தவிர அடுத்தவர்களுடைய நலனுக்காக இருக்கக்கூடாது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக பிரியுங்கள். அதுவே ஆரோக்கியத்தைத் தரும், வளர்ச்சியைத் தரும். வேண்டியவர்களுக்கு ஒன்று வேண்டாதவர்களுக்கு ஒன்று என்பது வேதனையைத் தான் தரும். தொண்டர்களுக்கு வேண்டியதெல்லாம் கழகம் வீருநடை போட வேண்டும், வெற்றி நடை போட வேண்டும். அதற்கு இது உதவும் என்றால் சந்தோஷமே''!