வேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, வேட்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் சிலை உள்ளது. அதன் அருகிலேயே ஜெயலலிதாவிற்கும் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 24ம்தேதி சிலை திறக்கப்பட்டது.
ஆனால் இந்த சிலை ஜெயலலிதாவின் உருவ அமைப்புடன் ஒத்துப் போகவில்லை என்று கூறி பெரும் சர்ச்சை எழுந்தது.
[ஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை.. அதிமுக தலைமையகத்தில் திறக்கப்பட்டது! ]
சாயல்
எம்ஜிஆர் சிலை தத்ரூபமாக இருந்த நிலையில், ஜெயலலிதா சிலை மற்றும் அவருடைய சாயல் இன்றி, வேறு சாயலில் இருந்ததாக பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இவரைப் போல் உள்ளதா, அவரைப் போல் உள்ளதா என்றெல்லாம் இணையதளங்களில் பல்வேறு பெண்களின் புகைப்படத்துடன் ஜெயலலிதாவின் சிலை ஒப்பீடு செய்யப்பட்டு வைரலாகின.
புதிய சிலை
இந்த சர்ச்சையை தொடர்ந்து ஜெயலலிதாவின் சிலையை மாற்றி விட்டு, புதிய சிலையை வடிவமைக்க அதிமுக தலைமை முடிவு செய்தது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் இந்த சிலையை வடிவமைத்தார். 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் ஜெயலலிதா சிலையை அவர் வடிவமைத்தார்.
திறப்பு விழா
ஜெயலலிதாவின் புதிய சிலை கடந்த மாதம் 23ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இந்த சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை 9.30 மணி அளவில் சிலையை திறந்து வைத்தனர்.
வேட்டி
ஆனால் சிலை திறப்புக்கு முன்பாக, சிலையை பட்டுத் துணியால் போர்த்தி வைப்பது வழக்கம். ஆனால் ஜெயலலிதாவின் சிலையை வேஷ்டியை வைத்து மூடி வைத்து இருந்ததாக புகைப்படங்கள் தற்போது வைரலாக சுற்றி வருகின்றன. இவ்வாறு யார் செய்தார்கள்? அவர்கள் மீது கண்டிப்பாக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.