இது ஜெயலலிதாவின் அதிமுகவா.. ஆச்சரியமா இருக்கே!
தேர்தலின்போது வேட்பாளர் அறிமுகத்தை முதலில் அறிவிப்பது அன்றைய அதிமுகதான்.
சென்னை: ஜெயலலிதா இந்நேரம் இருந்திருந்தால் இப்படியா அதிமுக அசமஞ்சமாக இருந்திருக்கும்?
தேர்தல் என்று வந்துவிட்டால் ஒரு கை பார்த்துவிடுவார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கட்சி ஆனாலும் சரி, ஆட்சி ஆனாலும் சரி... தன் விரல் நுனியில் எல்லா விவரங்களையும் வைத்திருப்பார்.
யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்பதனை முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருப்பார். தேர்தல் தேதி அறிவித்தவுடன், வேட்பாளரை அறிவிப்பதில் முதல் ஆள் ஜெயலலிதாவாகத்தான் இருக்கும். அது எந்தவித தேர்தலாக இருந்தாலும் சரி!!
தனி ரிப்போர்ட்
வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது குறித்து, உளவுத்துறை மூலமாக தனி ரிப்போர்ட் தயார் பண்ண சொல்லுவார். நாலாபக்கமும் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை சேகரிப்பார். இது போக, கட்சி ரீதியாக ஆலோசனையும் நடத்தி விரைவாகவும், எளிதாகவும் வேட்பாளர் பெயரை அறிவித்துவிடுவார்.
முன்கூட்டியே அறிவிப்பு
இப்போது நாம் விலாவரியாக விவாதித்து கொண்டிருக்கும், வேட்பாளர் இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்ற பேச்சுகூட அப்போது இருக்காது. திடீரென அறிவித்து ஷாக் கொடுப்பார். அந்த அளவுக்கு துல்லியமாக அனைவரையும் விட முன்கூட்டியே முடிவெடுப்பார்.
தெளிவின்மையே காரணம்
அவர் எடுத்த முடிவில் பெருமளவில் மாற்றமும், திருத்தமும், இருக்காது. அந்த அளவுக்கு இறுதியாக, உறுதியாக அந்த தேர்வு என்பது இருக்கும். ஆனால் அவர் வழி வந்த இப்போது நடக்கும் ஆட்சியில் எதற்காக இத்தனை குழப்பம்? தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும், ஒரு வேட்பாளரை முன்கூட்டியே தீர்மானித்து வைக்காதது கட்சியின் பலவீனத்தைதான் காட்டுகிறது. துணிந்து முடிவு எடுக்க முடியாத, தெளிவின்மையைதான் சுட்டிக் காட்டுகிறது.
வருத்தம்
கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆன டிடிவி தினகரனே துணிந்து வேட்பாளரை அறிவிக்கும்போது, பாரம்பரிய கட்சி, அதுவும் ஆளும் கட்சி இப்படி வேட்பாளரை அறிவிக்க தயங்குவது அதிமுக தொண்டர்களுக்கே வருத்தமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தொண்டர்கள் சந்தேகம்
"எங்க அம்மா இருந்தா இந்நேரம் முதல் ஆளா வேட்பாளரை அறிவிச்சிருப்பாங்க" என்று சொல்வதிலேயே அரசின் தடுமாற்றம் தெரிகிறது. உண்மையிலேயே இது ஜெயலலிதா கட்டிக் காத்த கட்சிதானா என்றும் சந்தேகம் தொண்டர்களிடையே எழ ஆரம்பித்துள்ளது.
சசிகலா குடும்பம்
உண்மையில் சிக்கல் என்னவென்றால் தமிழகத்தில் அதிமுகவையும், அதன் ஆட்சியையும் நிழலாக இருந்து நடத்தி வந்தது சசிகலா குடும்பத்தினர்தான். இதை அனைவரும் அறிவர். அதிலும் தஞ்சைத் தரணியில் இவர்களது குடும்பத்தைத் தாண்டி வேறு யாரும் இருந்ததில்லை. இதுவும் கூட திருவாரூர் வேட்பாளரை அதிமுக இறுதி செய்ய முடியாமல் தவிக்க முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.