ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு நீடிக்கும் அவகாசம் - ஜெ,மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 8வது முறையாக கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் எப்போது விலகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இரவு 10.20 மணிக்கு தான் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 75 நாட்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா நலமோடு இருப்பதாக பலராலும் கூறப்பட்ட நிலையில் டிசம்பர் 5, 2016ஆம் நாள் ஜெயலலிதா மரணமடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் இருந்தும் புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில்,கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ பாஸ் கட்டாயம்.. முதல்வர் பழனிசாமி
ஆணையம் விசாரணை
ஆறுமுகம்சாமி ஆணையம் தனது விசாரணையை கடந்த 2017ஆம் முதல் தொடங்கியது. போயஸ் கார்டனில் இருந்த சசிகலா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறினர்.
மயங்கி விழுந்த ஜெயலலிதா
சசிகலா தரப்பில் விசாரணை கமிஷனில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாக தெரிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதாவை கைத்தாங்கலாக படுக்கைக்கு கொண்டுவர தான் உதவியதாகவும், படுக்கையில் ஜெயலலிதா மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதா வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் சுயநினைவுக்கு திரும்பியதாக பிரமாணப்பத்திரத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவ நிபுணர்கள் இன்றி இயங்குவதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவில் இருந்தால்தான், விசாரணை முறையாக இருக்கும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றம் தடை
இதனை எதிர்த்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. இதையடுத்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசிடம் விளக்கம் கேட்டும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
8வது முறையாக அவகாசம் நீடிப்பு
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 7 முறை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகசாமி ஆணையம் 8ஆவது முறையாக கால நீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அதனை ஏற்று நேற்றுடன் முடிவடைந்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
ஜெ. மரண மர்மம் எப்போது விலகும்
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் எப்போது விலகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மரணமடைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ள அதிமுகவினர் மட்டுமல்ல தமிழக மக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.