டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா...? முழு வீச்சில் இறுதிக்கட்ட பணிகள்
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் அவரது நினைவு நாளான வரும் டிசம்பர் 5-ம் தேதி அதனை திறந்து வைக்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளை கடந்தும் தொடர்கின்றன.
தற்போதைய நிலவரப்படி 90 % பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் அலங்காரம், உள் வடிவமைப்பு உள்ளிட்ட 10 % பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
பிரம்மாண்ட முறையில்
மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினவிடத்தில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவை போன்ற கட்டிட வடிவமைப்பில் இந்த நினைவிடம் உருவாகி வருகிறது. ரூ.50 கோடி திட்ட மதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அது முடிவடையும் தருவாயில் உள்ளன.
டிசம்பர் 5-ம் தேதி
ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி அன்று நினைவிடம் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட வேண்டிய இந்த நினைவிடம் சூப்பர் ஸ்ட்ரக்சர் எனப்படும் பீனிக்ஸ் பறவையின் இறகு மாதிரி வடிவமைப்பதில் எழுந்த சிக்கல் காரணமாக தள்ளிப்போனது. இதையடுத்து துபாயில் இருந்து வந்த கட்டிடக் கலை நிபுணர்கள் உதவியுடன் அந்த சவாலான பணிகள் முடிக்கப்பட்டன.
அதிமுகவினர் எதிர்பார்ப்பு
ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டால் சென்னையின் சுற்றுலா தளங்கள் பட்டியலில் அதுவும் இணையக் கூடும். அந்தளவிற்கு பிரம்மாண்ட முறையில், பார்த்து பார்த்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைடையே ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டதால் அது விரைவில் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் அதிமுகவினர்.
சாதனைகள்
ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அவர் ஆற்றிய சாதனைகள், பொன்மொழிகள் உள்ளிட்டவற்றை பொறிக்க செய்தி விளம்பரத்துறை சார்பில் ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதே போல் ஜெயலலிதாவின் புகைப்படத் தொகுப்பு ஒன்றையும் நினைவிட மையத்தில் அமைக்க திட்டமிடப்படுகிறது.