மக்களால் நான்... மக்களுக்கான நான் - ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள சிறப்பம்சங்கள்
ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ள இடத்தில் மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த நினைவிடம் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்டமாக சென்னை காமராஜர் சாலையில் மெரீனா கடற்கரையில் 9.09 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் ஜெயலலிதா அடிக்கடி சொல்லும் வார்த்தையான மக்களால் நான் மக்களுக்கான நான் என்ற வார்த்தை அவரது நினைவிட முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு, ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணி, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 80 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஜெயலலிதா நினைவிடம் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. இத்துடன் எம்.ஜி.ஆர். சமாதி முழுவதும் புதுப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகளும் செய்யப்பட்டன.
ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி பூங்கா, புல்வெளி, நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டன. ஒட்டு மொத்த கட்டுமான பணிகளுக்கு ரூ.79 கோடியே 75 லட்சம் செலவிடப்பட்டது. நினைவிடத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக 500 டன் இரும்பு, 1,068 கியூபிக் மீட்டர் கான்கிரீட், நினைவிட சிறப்பு கட்டுமானத்துக்கு 300 டன் இரும்பு, 800 கியூபிக் மீட்டர் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்ட பீனிக்ஸ் பறவையின் உயரம் 15 மீட்டர், நீளம் 30 மீட்டர், அகலம் 43 மீட்டர் இதற்கான இறகுகள் துபாயில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு வரப்பட்டன. ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை கொண்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கான அலங்கார செடிகள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டன.
நினைவிடத்தின் முகப்பு பகுதியில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. மேற்கூரை அமைக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சூரிய சக்தி மின்சார பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அலங்கார மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.
ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், வீடியோ மற்றும் ஆடியோ காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், சிறுகதைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அரசியல் தலைவர் ஒருவருக்கான நினைவிடத்தில் டிஜிட்டல் முறையில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஜெயலலிதா பேசும் போது அடிக்கடி உச்சரிக்கும் வாசகம் அமைதி, வளம், வளர்ச்சி என்பதாகும். அதே போல மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வாசகத்தையும் அடிக்கடி கூறுவார். இந்த வாசகங்களை ஜெயலலிதாவின் நினைவிடம் அமைந்துள்ள மேடையில் பொறித்துள்ளனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் இருப்பது போன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அணையா விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு சுற்றுலா வரும் மக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து அண்ணா நினைவிடம், எம்ஜிஆர் நினைவிடத்தை பார்த்து செல்வார்கள். ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு நான்கு நினைவிடங்களையும் பார்த்து விட்டுத்தான் வேறு இடங்களை சுற்றிப்பார்க்க செல்கின்றனர்.
ஜெயலலிதா நினைவிடம் தற்போது அழகாக, பிரம்மாண்டமாக கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் மட்டுமல்லாது ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.