ஜெ. தீபா... திடுதிப்பென குதித்த வாரிசு.. மி(தி)ரண்ட தொண்டர்கள்... காலநதியில் காணாமல் போன பரிதாபம்
சென்னை: தமிழக அரசியலில் நானும் இருக்கிறேன் என்பதற்காக கொடிபிடித்து போஸ்டர் ஒட்டி எத்தனையோ சீன் போட்டு மாயமாகிப் போனவர்கள் இருக்கிறார்கள்..அவர்கள் நினைவடுக்குகளில் இருப்பது இல்லை.. ஆனால் இந்த மாயமான்களில் எல்லோரையும் மிஞ்சியவராக தலை கிறுகிறுக்க வைத்து தெறிக்கவிட்டவர் ஜெ. தீபா.
மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்தி நினைவில்லமாக்குகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
மேலும் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரியும் மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பான வழக்குகளில் ஜெயலலிதாவின் 2-வது நிலை வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை அங்கீகரித்து தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
வாரிசே இல்லை என்று சொன்னவர் ஜெயலலிதா.. உயிலும் எழுதவில்லை.. தீபா வாரிசு கிடையாது- புகழேந்தி
தொண்டர்கள் ஆதரவு
ஜெ. தீபா.. தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடிய பெயரும் அல்ல.. முகமும் அல்ல.. ஜெயலலிதா என் அத்தை.. என் அத்தையின் முகத்தை கடைசியாகக் கூட பார்க்க விடாமல் சதி செய்கிறார்களே என சசிகலா அண்ட்கோவுக்கு எதிராக கதறி பரிதவித்த தீபாவுக்கும் அதிமுக தொண்டர்கள் ஆதரவு கரம் நீட்டினார்கள்.. அதிமுகவுக்கு சசிகலா தலைமை ....அவரை எதிர்ப்பவராக இன்னொரு பக்கம் தீபா.
அடுத்த ஜெயலலிதா
தொடக்க நாட்களில் தீபாதான் புதிய ஜெயலலிதா என்கிற வகையில் அடேங்கப்பா எவ்வளவு கூட்டம் கூடியது.. தீபாவின் வீட்டு தெருவில் மட்டுமல்ல.. அந்த பகுதியே அதிமுக தொண்டர்களால் அலைமோதியது.. தீபாவின் தலைமையை ஏற்க ஆயிரமாயிரம் அதிமுக தொண்டர்கள் தயாராக இருந்தனர். ஆனால் இதனை அறுவடை செய்து ஒரு ஆளுமை மிக்க தலைவராக உருவெடுக்கக் கூடிய திறமை கிஞ்சித்தும் தீபாவுக்கு இல்லாமல் போனது.
விட்டில் பூச்சி
தீபா.. தீபாவின் சகோதரர் தீபக்.. தீபாவின் கணவர் மாதவன், தீபாவின் ஓட்டுநர் ராஜா என இவர்கள் நடத்திய கூத்துகள் இரவு நேர காமெடி காட்சிகளுக்கு சவால்விடுபவையாக மாறிப் போயின.. ஜெ. தீபாவும் தமிழகத்தை ஆளப் போகிறார்.. அவரது கட்சிதான் அதிமுகவாகப் போகிறது என்றெல்லாம் மனக்கோட்டை கட்டி முதலீடு செய்து முக்காடு போட்டவர்கள் முக்கி முக்கி சொன்ன கதைகள்தான் எத்தனை எத்தனை? தமிழக அரசியல் காணாத அடேங்கப்பா விட்டில் பூச்சியாகத்தான் ஜெ. தீபா.
அதிமுகவும் ஏறெடுக்கவில்லை
தீபாவால் தம்படி பிரயோசனும் இல்லை என நினைத்த தொண்டர்களின் பெருங்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை கழகத்திடமே சரணாகதி அடைந்தன.. தொண்டர்களால் நிறைந்த தீபா வீட்டு தெரு ஈ, காக்கா கூட அண்டாத சூனிய பிரதேசமாகிப் போனது.. வேறுவழியே இல்லாமல் அதிமுகவிலேயே தம்மை இணைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் மனு போட்டு இலவு காத்த கிளியாகிப் போனார் தீபா.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
இப்படி எல்லாமே சறுக்கலாய் சந்தித்த தீபாவுக்கு இப்போதுதான் ஜெயலலிதாவின் 2-ம் நிலை வாரிசு என்கிற அங்கீகாரம் ஆறுதலான ஒன்றாக இருக்கும். இனியேனும் தீபா தமக்கான எல்லைகளை உணர்ந்து அல்லது தம்மை தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி தனி முத்திரை பதிப்பாரா? என்பதை பொறுத்திருந்தே பார்ப்போம்.