"I hate dance mummy..." என்று சொன்ன அந்த அம்முதான்!
அன்னை சந்தியா மீது ஜெயலலிதா நிறைய பாசம் வைத்திருந்தார்.
சென்னை: "I hate dance mummy..." என்ற சொன்ன அந்த அம்முதான்... அம்மாவாக இன்று அதிமுக உட்பட பலரால் போற்றப்பட்டு வருகிறார்.
"நீ டான்ஸ் கத்துக்கணும் அம்மு" என்று அம்மா சந்தியா சொல்ல, "என்ன மம்மி.. நீதானே என்னை டாக்டரோ இன்ஜினியரோ ஆகணும்னு சொல்லுவே?" என்று கேட்கிறார் அம்மு. "படிப்பு தவிர நீ எல்லா திறமைகளையும் வளர்த்துக்கணும் அம்மு" என்றதும் உடனே சரி என்கிறார்.
டான்ஸ் டீச்சரும் வீட்டுக்கு வருகிறார். "காலில் விழுந்து குரு வணக்கம் வாங்கிக்கம்மா" என்று சந்தியா சொல்ல, "என்ன மம்மி நீதானே யார் கிட்டயும், எதுக்காகவும் தாழ்ந்து போகக்கூடாதுன்னு சொல்லுவே" என்கிறார்.
இனம் புரியாத அன்பு
உடனே அம்மா, "இது பெரியவர்களிடம் ஆசீ பெறுவது, இதை செய்யலாம். சுயநலத்துக்காத்தான் யார் கால்களிலும் விழக்கூடாது" என்றதும் மறு வார்த்தை அம்முவிடம் இருந்து வரவில்லை. அன்று தொடங்கியது குருபக்தி. ஆனால் அதற்கு முன்பே புதைந்திருந்தது தாயிடத்தில் இனம் புரியாத அன்பு.
கேலி கிண்டல்
எல்லா சந்தேகங்களும், கேள்விகளும், பதில்களும், ஆலோசனையும், அறிவுரையும் தாயிடமே கேட்டு பெற்று பழகி விட்டார் அம்மு. ஒருமுறை வெண்ணிற ஆடை படம் வெளிவந்த சமயம் அது. தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு போயிருக்கிறார் அம்மு. ஆனால் அங்கிருந்தவர்கள் எல்லாம் அம்முவை கேலி கிண்டலுடன் பார்த்திருக்கிறார்கள்.
கட்டிப்பிடித்து அழுதார்
ஏனென்றால் வெண்ணிற ஆடை படத்தில் அம்மு குளிப்பது போன்ற காட்சிகளை சொல்லி பேசவும் முகம் வாடிப்போனது. அம்மாவை கட்டிப்பிடித்து அழுதார். அப்போதுதான் நீண்ட நேரம் அம்முவை மடியில் வைத்து அரவணைத்து தேற்றியிருக்கிறார் சந்தியா. அப்போது நிறைய அறிவுரைகளையும் சொல்லி இருக்கிறார்.
3 சபதம்
அதில் முக்கியமானது, "யாருக்கும் கூழை கும்பிடு போடக்கூடாது, யாரையும் கேவலமாக நடத்த இடம் தரக்கூடாது, யாரை பார்த்தும் பயப்பட கூடாது" என்பதுதான் அவை. இந்த 3 சபதங்களும் அன்று எடுத்ததுதான் பின்னாளில் உலக புகழ் அடையும்வரை அம்முவுடனே பயணித்தது.
ரெகுலர் கஸ்டமர்
எவ்வளவு பெரிய நடிகை ஆனாலும் குழந்தைதனம் கூடவே ஒட்டிக் கொண்டு வந்தது. குறிப்பாக அந்த முந்திரி பக்கோடாதான்! எத்தனை விதவிதமான சாப்பாடு பொருட்கள் இருந்தாலும் முந்திரி பகோடா மேல்தான் தனி உயிரே. அதுவும் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ரெகுலர் கஸ்டமர் அம்முதான். அம்முவுக்கு ஸ்பெஷல் முந்திரி பகோடா தயாராகி வீடு தேடி வந்துவிடுமாம்.
பிடித்த உணவு
அதனால்தான் உட்லண்ட்ஸ் ஹோட்டல் மூடப்பட்டபோது நிறைய வருத்தப்பட்டார். இது சம்பந்தமாக ஒரு பேட்டியில்கூட, "நடிகையாக இருந்த காலத்தில், ஷூட்டிங் முடிந்து பல நேரங்கெட்ட நேரத்தில்கூட, டிரைவ் இன் உணவுகள் எனக்கு பலமுறை கைகொடுத்துள்ளன" என்று சொன்னாராம் அம்மு!!