தவிடுபொடியான யூகங்கள்... ஜெயலலிதா பிறந்தநாளை வெற்றி வியூகமாக மாற்றிய ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கூட்டணி!
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அ.தி.மு.கவினர் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் உற்சாகமாக அதுவும் ஒற்றுமையாக கொண்டாடியுள்ளனர்.
அதிமுக தொண்டர்கள் சசிகலா பக்கம் ஒதுங்கி விடக்கூடாது அவர்களை ஓரணியில் திரட்ட வேண்டும் என்று ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் சேர்ந்து முடிவெடுத்தனர். இதற்கு அவர்கள் கையில் எடுத்த மிகச்சிறந்த ஆயுதம்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்.
சசிகலா விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்த உடனேயே அதிமுகவில் சலசலப்பு ஏற்பட தொடங்கியது. சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றி விடுவார். அதிமுகவில் உள்ள பல அமைச்சர்கள் சசிகலாவுடன் செல்வார்கள் என்ற பேச்சு வீதியெங்கும் உலா வர தொடங்கியது. இந்த பேச்சுக்கு அச்சாரமிடுவது போல் அமைந்தது சசிகலாவின் விடுதலை.
ஆட்டம் தொடங்கி விட்டது
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த சசிகலா ஜெயிலில் இருந்து அதிகாரப்பூர்வமான விடுதலையும் பெற்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றார். அங்கு இருந்து பெங்களூரு வீட்டுக்கு செல்லும்போதே ஒரு திரியை கொளுத்தி போட்டுத்தான் சென்றார். ஆம்.. அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே அவர் வீட்டுக்கு சென்றார். அப்போதே அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தொடங்கின. சசிகலா ஆட்டம் தொடங்கி விட்டார் என்று உலா பேச்சுக்களும் வலுத்தன.
ஆடிப்போன எடப்பாடியார்
இதனை தொடர்ந்து பெங்களூரு சென்னை வந்த சசிகலா தொடர்ந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே வந்தார். அவருக்கு அமமுகவினர் கொடுத்த பிரமாண்ட வரவேற்பை பார்த்து அதிமுக தலைமையே திக்குமுக்காடி போனது என்றுதான் சொல்ல வேண்டும். அதிமுக பிரமுகர்கள் சிலர் சசிகலாவை வரவேற்றும், அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரும் கொடுத்ததும் பார்த்து எடப்பாடியார் ஆடிப் போனார். இதன் பிறகு வரும் வழியில் சசிகலாவின் அதிரடி பேச்சு எடப்பாடியாரின் பல்ஸ்சை மேலும் எகிற வைத்தது.
ஓ.பி.எசின் அமைதியின் மர்மம்
பின்னர் சென்னை வந்ததும் சசிகலா அமைதியாக இருந்தார். இதேபோல் ஓ.பி.எஸ்.சும் எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் அமைதியாக இருந்தது பலரின் வெறும் வாய்க்கு அவல் போடுவதுபோல் அமைந்து விட்டது. ஓ.பி.எஸ். சசிகலா பக்கம் திருப்ப வேண்டும் என்று டிடிவி தினகரனும் சொல்ல, ஓ.பி.எஸ் ஏதோ செய்ய போகிறார் என்ற தகவல்கள் வேகமாக உலா வர தொடங்கின. ஓ.பி.எஸ். ஏன் அமைதியாக இருக்கிறார் என்று எடப்பாடியிடமும் பத்திரிகையாளர்கள் நேரடியாக கேள்வி கேட்டனர். இதுபோக மேலும் சிலரும் சசிகலா அணி தாவ போகிறார்கள் என்ற பேச்சும் அடிபட்டது.
ஒற்றுமையை நிரூபித்தனர்
அதன்பிறகு காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட விழாவில் பங்கேற்று வதந்தி பேசியவர்கள் வாயை கட்டிப்போட்டார் ஓ.பி.எஸ். இது எடப்பாடியாருக்கு நிம்மதி கொடுக்க, அதிமுக தொண்டர்கள் சசிகலா பக்கம் ஒதுங்கி விடக்கூடாது அவர்களை ஓரணியில் திரட்ட வேண்டும் என்று ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் சேர்ந்து முடிவெடுத்தனர். இதற்கு அவர்கள் கையில் எடுத்த மிகச்சிறந்த ஆயுதம்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள். ஆம்... மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அ.தி.மு.கவினர் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் உற்சாகமாக, அதுவும் ஒற்றுமையாக கொண்டாடியுள்ளனர்.
தேர்தலுக்கான முன்னோட்டம்
பல்வேறு யுகங்களுக்கு பதில் சொல்லும் விதமாக சட்ட பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னோட்டமாக இந்த பிறந்தநாளை கொண்டாடி அதில் வெற்றியும் பெற்றுள்ளது அ.தி.மு.க தலைமை. ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை அ.தி.மு.கவினர் வீடுகளில் தீபம் ஏற்றி உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவரும் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். இதை அப்படியே ஏற்றுக் கொண்ட அ.தி.மு.க தொண்டர்கள் வீடுகளில் விளக்கேற்றி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
அதிமுக தலைமைக்கு வெற்றி
இந்த உறுதிமொழி நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்பதை காட்டுவதாக அமைந்தது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் மாறி மாறி ஊட்டி கொண்டது ஒற்றுமையையும் சேர்த்து ஊட்டிக் கொண்டதாக அமைந்தது. இதுதவிர நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைந்தே கலந்து கொண்டது ஒற்றுமையை பலப்படுத்துவதாக அமைந்தது.
யூகங்களுக்கு முற்றுப்புள்ளி
தேர்தல் நெருங்கி வருவதால், ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை தொண்டர்களை ஒன்றிணைத்து உற்சாகப்படுத்தும் விதமாக அமைத்துக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது அ.தி.மு.க தலைமை. ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மூலம் அ.தி.மு.க தொண்டர்கள் ஈபிஎஸ் ஓபிஎஸ் பின்னால் அணி திரண்டு நிற்பதை காண முடிகிறது . இதன் மூலம் சசிகலா வருகை அ.தி.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்ற யூகங்களுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.