ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா: அதிமுக தொண்டர்களை குளிர்வித்த முதல்வரின் அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தார் ஜெயலலிதா. நடிகையாக இருந்த ஜெயலலிதா முதல்வரான பின்னர் அதிமுக தொண்டர்களால் அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த நினைவிடத்தை வந்து பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா நிலையம் நினைவு இல்லமும் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல உருவச் சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அதே போல. காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா வளாகம் என பெயர் சூட்டி திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதா பாதையை பின்பற்றி முதல்வர் பழனிசாமி ஆட்சி நடத்துவதாக புகழாரம் சூட்டினார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா என்றும் பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அரசு இருக்கிறது என்றும் தெரிவித்தார். இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24 ஆம் தேதியன்று ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
ஆண்டு தோறும் ஜெயலலிதா பிறந்தநாளில் சென்னை மெரினாவில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தொண்டர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் பழனிச்சாமி.