எனது அத்தை பொது சொத்து அல்ல... பாரம்பரிய வீடு... மேல்முறையீடு செய்வேன்... தீபா பேட்டி!!
சென்னை: எனது அத்தை (ஜெயலலிதா) பெரிய தலைவராவதற்கு முன்பு ஒரு சகோதரனுக்கு சகோதரியாக, எங்களுக்கு அத்தையாக குடும்ப உறவுகளுடன் இருந்தவர். அந்த வகையில்தான் எங்களது குடும்ப பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று ஆசைபட்டுதான் வழக்கு தொடுத்தோம். மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அவங்களுக்கு ஆசை பாசங்கள் இருந்தது. இதை தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் வீடு இன்று அரசுடைமையாக்கப்பட்டது. இதற்கு அவரது அண்ணன் மகள் தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது முடிவு அல்ல.. இனிதான் ஆரம்பம்.. வேதா நிலையத்தை சட்டரீதியில் போராடி மீட்பேன்- ஜெ தீபா சபதம்
அரசு சொத்து இல்லை
இன்று அவர் அளித்திருக்கும் பேட்டியில், ''அரசின் அறிவிப்பை எதிர்த்து சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்ய இருக்கிறேன். இவங்க ஒன்றும் எனக்கு பிச்சை போட வேண்டியது இல்லை. இது தனியார் சொத்து. அரசு சொத்து ஒன்றும் இல்லை. நியாயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய அத்தை மக்களுக்காகவும், அரசுக்காகவும் சேவை செய்து விட்டுதான் போயுள்ளார். அப்படி இருக்கும்போது ஒரே குடும்பத்தில், உறுப்பினர்கள் நிம்மதியாக இருக்க முடியாமல் தொடர்ந்து வழக்குகள், சர்ச்சைகளை உருவாக்குவது, அதிமுக அரசாக இருக்கட்டும் வேறு யாராக இருந்தாலும் சரி. அவர்கள் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும். அம்மா இருக்கும்போது கட்சிக்காக வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார்.
குடும்ப பாரம்பரியம் உள்ளது
அவர்களது நினைவு அந்த இல்லத்தில் உள்ளது. பெரிய தலைவர்கள் அந்த வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். அவங்க பெரிய தலைவர் ஆவதற்கு முன்பு எங்களுக்கு சகோதரியாக, குடும்ப உறவுகளுடன் இருந்தவர். அந்த வகையில்தான் எங்களது குடும்ப பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று ஆசைபட்டுதான் வழக்கு தொடுத்தோம். மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அவங்களுக்கு ஆசை பாசங்கள் இருந்தது. அதிமுகவில் இருந்தவரை தொண்டர்களின் உள்ளத்தில் வைத்து பூஜிக்கப்பட்டவர். அவரை பொது சொத்தாக அறிவிப்பதையே நான் விரும்பவில்லை.
சட்ட ரீதியில் நடவடிக்கை
அந்த இல்லத்தை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. ஒரு முழு காரணம் இல்லாமல் அந்த வீடு கையகப்படுத்தப்பட்டுள்ளது. சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன். அரசியல் காரணங்கள் இதில் இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வேதா இல்லம்
சென்னையில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையானது. நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு சென்னை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று அரசுடமையாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முதல்வர் இல்லம் இல்லை
இந்த இழப்பீட்டுத் தொகையை நகர உரிமையியல் நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் வேதா இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலாக மாற்ற முடியாது. அதற்கான சத்தியக் கூறுகள் இல்லை. ஜெயலலிதாவின் இல்லத்தை அறக்கட்டளை நிர்வகிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நினைவு இடமாக மாற்றுவதற்கு 2017ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவிலான இந்த வீட்டில் ஒரு சதுர அடியை ரூ. 12,000 விலைக்கு அரசு எடுத்துக் கொண்டுள்ளது.
Recommended Video
வருமான வரி பாக்கி
தமிழக அரசு இழப்பீட்டுத் தொகையான ரூ. 67.9 கோடியை சிவில் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது. மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கியான ரூ. 36.9 கோடியையும் அரசே செலுத்த முடிவு செய்துள்ளது.