ராஜா.. ஈசிஆர். ராமச்சந்திரனால் உயிருக்கு ஆபத்து... சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் ஜெ தீபா புகார்
சென்னை: என் உயிருக்கு இரண்டு பேரால் ஆபத்து உள்ளது, இவர்களை பற்றி பலமுறை புகார் அளித்தும் காவல்துறை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷ்னருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வாட்ஸ் அப் ஆடியோ மூலம் புகார் அனுப்பி உள்ளார்.
ஈசிஆர். ராமச்சந்திரன் மற்றும் ராஜா ஆகிய இரண்டு பேர் தனது பெயரில் பலரிடம் பணம் வசூல் செய்து தன்னிடம் கொடுத்தாக கூறி உள்ளார்கள், எனவே
எனது உயிருக்கும், உடமைக்கும், எனது கணவருக்கும் இவர்களால் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது என ஜெ தீபா புகார் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியலில் களம் இறங்கினார். போதிய முன் அனுபவமோ மற்றும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை காலம் தவறி புரிந்த அவர் ஒருகட்டத்தில் அரசியல் தனக்கும் தன் கணவருக்கும் ஒத்துவராது என்று விலகிவிட்டார்.
ஜெயலலிதாவின் வாரிசுகள்
தற்போதைய நிலையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் ஜெ தீபா மற்றும் அவரது அண்ணன் ஜெ தீபக் ஆகியோர் தான் என சென்னை உயர்நீதிமன்றமே அறிவித்துவிட்டது. அவர்களுக்கு ஜெயலலிதாவின் சொத்துக்கள் திரும்ப அளிக்கப்பட உள்ளது. போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லாமாக மாறுவதால் அதற்கான தொகையும் இவர்களுக்குத்தான் தரப்பட உள்ளது.
ஜெ தீபா புகார்
இந்நிலையில் ஜெ தீபா சென்னை போலீஸ் கமிஷனருக்கு வாட்ஸ் அப் ஆடியோ மூலம் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அனுப்பினார். அதில் அவர் " அரசியலில் நான் முழு வீச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு கூட்டம் சேர்ந்து என்னை ஏமாற்றி கொள்ளையடித்து வந்தது.
உயிருக்கு ஆபத்து
குறிப்பாக, தனக்கு அறிமுகமே இல்லாத ராஜா மற்றும் ஈசிஆர்.ராமச்சந்திரன் என்ற இருவர் வியாபாரி என்று தங்களை சொல்லிக்கொண்டு என்னுடைய பேரவையில் இருந்து வந்தார்கள் தனக்கு இவர்களால் ஆபத்து ஏற்பட்ட போது, இவர்கள் மீது பலமுறை நான் புகார் அளித்தும் காவல்துறை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. ஈசிஆர். ராமச்சந்திரன் மற்றும் ராஜா என்ற இந்த இரண்டு பேரும் பலரிடம் பணம் வசூல் செய்து அதை எண்ணிடம் கொடுத்ததாக கூறியிருக்கிறார்கள்.
ஜெ தீபா அச்சம்
எனது உயிருக்கும், உடமைக்கும், எனது கணவருக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளே அத்துமீறி அந்த இரண்டு பேரும் வீடு புகுந்து மிரட்டினர். இவர்கள் இருவரும் என்னை பின்தொடர்கிறார்கள். இதனால், நான் அச்சம் அடைந்துள்ளேன். எனது உடல்நிலை தற்போது பாதிப்படைந்திருக்கிறது-. எனக்கு மன உளைச்சலும், ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே, காவல் ஆணையர் இந்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார்.