ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட 28 முதல் அனுமதி - அமைச்சர் அறிவிப்பு
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் வருகின்ற 28ம் தேதி மக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். வேதா இல்லத்தில் ஜெயலலிதா விரும்பி படித்த புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை, போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் இருக்கிறது. அவரது மறைவுக்குப் பின்னர் இந்த இல்லத்தில் அவரது தோழி சசிகலா குடியிருந்து வந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்ற பின்னர் அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து அந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். வேதா நிலையத்தை கையகப்படுத்த 5.10.2017 அன்று தமிழக வளர்ச்சித்துறை நிர்வாக ரீதியிலான ஒப்புதல் அளித்து இருந்தது. இதையடுத்து, நிலம் மற்றும் இல்லத்தைக் கைப்பற்ற பூர்வாங்க அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. பின்னர் இதற்கான உறுதி ஆவணமும் வெளியிடப்பட்டது.
இதனிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவை சேர்ந்த புகழேந்தி கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், தங்களை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்று தீபக் மற்றும் தீபா மனு அளித்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும் மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப் பூர்வமான இல்லமாக மாற்றவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்தது . சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 68 கோடி டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது.
வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடி , வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக 32 கோடி ரூபாய் என 68 கோடி ரூபாயை அரசு செலுத்தியுள்ளது. ஒரு சதுர அடி 12,060 ரூபாய் என்ற அடிப்படையில் இந்த தொகையானது செலுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியதால் வேதா நிலையம் அரசுடமையானது என்றும் வேதா நிலையத்திற்கு உரியவர்கள் இழப்பீட்டு தொகையை நகர உரிமையியல் நீதி மன்றத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அறிவித்தது. இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகம் ஆக மாற்றுவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தது.
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்கு மறுநாள் ஜனவரி 28ஆம் தேதியன்று ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீட்டை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். வேதா இல்லத்தில் ஜெயலலிதா விரும்பி படித்த புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வேதா இல்லத்திற்குள் சென்று விடக்கூடாது என்று அரசு சார்பில் அனைத்து வேலைகளும் ஜரூராக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.