இது அதிமுகவின் அடுத்த லெவல்.. சரியான நேரத்தில்.. சரியான இடத்தில்.. சரியான வாசகம்.. மக்கள் ஆச்சரியம்
அரசு பஸ்களில் ஜெயலலிதாவின் புகழ்பெற்ற வாசகம் இடம்பெற்றுள்ளது
சென்னை: "அரசு பஸ்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" வாசகம் இடம்பெற்றுள்ளது.. இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் உற்சாகமாகி வரும் அதே சமயம், ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லியே வாக்கு வாங்கிவிடலாம் என திட்டமிட்டுள்ளனர் போலும் என்ற முணுமுணுப்புகளும் எழுந்துள்ளன!
விரைவில் தேர்தல் வரப்போகிறது.. எல்லா கட்சிகளும் அதற்கான வேலைகளில் இறங்கி விட்டன.. கூட்டணி, சீட் பேரம் உட்பட எல்லா பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாகவும் ஜரூராகவும் நடந்து வருகின்றன.
செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி ஆளும் கட்சி ஓட்டு கேட்கும்.. செய்யாத, செய்ய தவறிய செயல்களை குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் என்பது காலங்காலமாக நடந்து வரும் வழக்கமான நடைமுறைதான். இந்த முறையும் அப்படித்தான் நடக்க போகிறது.
பாமக முன்னெடுக்கும் இட ஒதுக்கீடு போராட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு தூது மேல் தூது விடும் அதிமுக..!
முதல்வர் ஜெயலலிதா
அந்த வகையில், ஆளும் தரப்பு இப்போதே தன் வேலையை ஆரம்பித்துவிட்டதோ என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.. அரசு பஸ்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
டிரைவர்
டிரைவர் சீட்டுக்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது.. அதற்கு கீழே கீழ் புரட்சித் தலைவி அம்மா என்று கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.. வழக்கம் போல் திருக்குறளும், விதிமுறைகளும் பஸ்ஸின் முன்பக்கம் உட்பட பல இடங்களில் எழுதி வைத்திருந்தாலும், டிரைவர் சீட்டுக்கு பின்பக்கம் உள்ள இந்த வாசகம் அனைவர் கண்ணிலும் படும்படியாக உள்ளது.
வாசகம்
ஜெயலலிதா தன் கடைசி காலங்களில் அதிகமாக பயன்படுத்திய வாசகம் இதுதான்.. பஸ்ஸில் இது அச்சிடப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை.. "ஜெ.ஜெயலலிதா எனும் நான்" என்ற வாசகம் எந்த அளவுக்கு கம்பீரம் நிறைந்ததோ எந்த அளவுக்கு கர்வமும் இருக்குமோ அதே அளவுக்கு கம்பீரத்துடன் கர்வமும் சேர்ந்தே இருக்கும், "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்று சொல்லும்போது!
பொதுக்கூட்டம்
இது குறித்து சில எதிர்க்கட்சியினர் ஏளனம் கூட செய்தார்கள்.. ஆனால், இந்த வாசகத்தை ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும், பிரச்சாரங்களிலும் ஜெயலலிதா உச்சரிக்கும்போது கைதட்டல் சத்தம் வானை பிளக்கும்.. உணர்ச்சி வெள்ளத்தில் தொண்டர்கள் தத்தளித்து போவார்கள்.. அந்த வகையில் மக்களை கவர்ந்த ஒரு வாசகம் என்பதில் மாற்று கருத்தில்லை. இதனால் தொண்டர்களுக்கு இந்த வாசகம் மீண்டும் புத்துணர்ச்சி தருவது போல அமைந்து வருகிறது.
ஐடியா
அதேசமயம், மக்களை புது புது அறிவிப்புகளையும் அதிமுக அரசு வெளியிட்டு கொண்டிருப்பதுபோல, இப்படிப்பட்ட ஐடியாவையும் தேர்தலுக்கு பயன்படுத்துகிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது.. ஜெயலலிதா பேரை சொல்லி சொல்லி ஓட்டு கேட்கும் முறைகளில் இதுவும் ஒன்றோ என்ற ரீதியில் கேள்வியை எதிர்தரப்பினர் எழுப்ப தொடங்கி உள்ளனர்.
கருணாநிதி
ஒருமுறை, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை குறித்து ஜெயலலிதா ஒருகூட்டத்தில் பேசும்போது, "அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் திருவள்ளுவரின் காலத்தால் அழியாத திருக்குறளை அழித்துவிட்டு, தன்னுடைய வாசகங்களை எழுத வைத்த கருணாநிதி, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை சரியாக பராமரிக்கப்படவில்லை என இல்லாத ஒன்றைக் கூறி உள்ளார்.
விமர்சனம்
"பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்".. அதாவது, பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள் என்ற வள்ளுவரின் வாய்மொழியை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்றார்.
அரசியல்
திருக்குறளை அழித்துவிட்டு, தன் வாசகத்தை கருணாநிதி எழுதி கொண்டார் என்று ஜெயலலிதா அன்று கூறியிருந்தார்.. இன்று அவர் வாசகமே இடம் பெற்றுள்ளதே என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்... இது அரசியல் ரீதியாக எப்படி எதிரொலித்தாலும், ஜெ.பேசிய இந்த வரிகள் ரத்தத்தின் ரத்தங்களுக்கு உத்வேகத்தையே தந்து வருகிறது!