ராஜகோபால் கொலையாளியானது இப்படித்தான்... ஜீவஜோதியின் அன்றைய பகீர் சாட்சியம்- Flash Back
Recommended Video
சென்னை: பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நிலையில் மரணமடைந்த சரவணபவன் ராஜகோபால் கொலையாளியானது குறித்து 16 ஆண்டுகளுக்கு முன்னர் ஜீவஜோதி நீதிமன்றத்தில் அளித்த கண்ணீர் சாட்சியம் அன்று அனைவரையும் அதிர வைத்தது.
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு 2003-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி கூடுதல் பெஞ்ச் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நீதிமன்றத்தில் ஜீவஜோதி அளித்த கண்ணீர் சாட்சியம் இது:
1994ம் ஆண்டு சென்னைக்கு பிழைப்புக்காக குடும்பத்துடன் வந்தேன். செனை கே.கே.நகரில் உள்ள சரவண பவனில் என் சித்தப்பா தட்சிணாமூர்த்தி மேலாளராக இருந்தார்.
அவரிடம்தான் சொத்தை விற்று கையில் இருந்த ரூ4.5 லட்சத்தை வைத்து தொழில் செய்யலாம் என முடிவு செய்திருப்பதாக தெரிவித்தோம். அவரோ, அந்த பணத்தை கொடுங்க.. உரிமையாளர் ராஜகோபாலிடம் கொடுத்து மாதந்தோறும் வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
டேபிள் துடைத்த "பாய்" முதல் ராஜகோபால் ஹோட்டல்களின் ராஜாவான கதை!
அசோக் நகர் பிராஞ்ச்சில் வேலை
ராஜகோபாலும் மாதம் ரூ7,000 வரை வட்டியாக கொடுத்து வந்தார். பின்னர் அசோக் நகர் கிளையில் என் தந்தைக்கு வேலை கொடுத்தார் ராஜகோபால். மேலும் கே.கே.நகரில் உள்ள சரவணபவன் ஊழியர் குடியிருப்பில் வசிக்கவும் ராஜகோபால் அனுமதி தந்தார்.
சாந்தகுமாருடன் காதல்
அந்த வீட்டில் என் தம்பிக்கு டியூசன் எடுக்க வந்தவர் பிரின்ஸ் சாந்தகுமார். அவருக்கும் எனக்கும் காதல் உருவானது. இது ராஜகோபாலுக்கு பிடிக்காமல் போனது. பிரின்ஸ் சாந்தகுமார் என் வீட்டுக்கு வரக் கூடாது என வலியுறுத்தினார் ராஜகோபால். இதை என் அப்பா ஏற்க மறுத்தார்.
ராஜகோபாலிடம் இருந்து விலகல்
அத்துடன் ராஜகோபாலிடம் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி சரவணபவனை விட்டு வெளியேறி வந்தார். அதன் மூலம் லாரி பிசினஸில் ஈடுபட்டார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டது.
மலேசியாவில் அப்பா
இந்நிலையில் சாந்தகுமார் வீட்டுக்கு வருவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ராஜகோபால் கூறினார். இதையடுத்து எனது தந்தை சரவண பவனில் பார்த்து வந்த வேலையை விட்டார். எம்.ஜி.ஆர். நகரில் வேறு வீடு பார்த்து குடியேறினோம். பின்னர் எனது தந்தை வேலைக்காக மலேசியா சென்று விட்டார். இந் நிலையில் பிரின்சுடனான எனது காதலை எனது தாயார் எதிர்த்தார். இதனால் நானும், சாந்தகுமாரும் அண்ணா நகரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் மதுரை சென்று விட்டோம்.
டிராவல்ஸ் பிசினஸ்
அங்கு சாந்தகுமாரின் பெற்றோர் எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவைத் தொடர்பு கொண்டேன். அவர் மதுரைக்கு வந்து எங்களை ஏற்றுக் கொண்டு சென்னைக்கே திரும்ப அழைத்து வந்தார். இங்கு வந்த பிறகு வேளச்சேரியில் ஒரு வீட்டில் குடியேறினோம். டிராவல்ஸ் பிசினஸ் செய்யலாம் என்று நினைத்தோம். கையில் பணமில்லாததால், பணத்திற்காக ராஜகோபாலையே அணுகினோம். அவரும் கடன் கொடுத்தார். ராஜகோபாலே தலைமை தாங்கி டிராவல்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் அடிக்கடி எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார் ராஜகோபால்.
பிரின்ஸை பிரிக்க சதி
எனக்குக் கட்டளையிடுவது போலவே அவரது பேச்சுக்கள் இருக்கும். எனது கணவரிடமிருந்து என்னைப் பிரிக்கும் நோக்கிலேயே அவரது பேச்சுக்கள் இருக்கும். ஒரு முறை எனது கணவருக்கு எய்ஸ்ட் நோய் இருப்பதாகவும், என்னை சினிமாவில் சேர்த்து விட பிரின்ஸ் முயற்சிப்பதாகவும் கூறினார்.
ராஜகோபாலுடன் வாக்கு வாதம்
மேலும் நீ சினிமாவில் சேருவது எனக்குப் பிடிக்கவில்லை என்றார். அதுபற்றி நான்தான் கவலைப்பட வேண்டும், நீங்கள் கவலைப்பட அவசியமில்லை என்று நான் கூறிவிட்டேன். பின்னர் கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ராஜகோபாலும், அவரது ஆட்களும் எங்களது வேளச்சேரி வீட்டுக்கு வந்திருந்தனர்.
அடியாட்கள் மூலம் தாக்குதல்
பேச வேண்டும் என்று கூறி என் கணவர், தாய், தந்தை மற்றும் என்னை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அசோக் நகரில் உள்ள சரவண பவன் குடோனுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து எனது கணவரை ராஜகோபாலும், அவரது அடியாட்களும் அடித்து, உதைத்தனர். பின்னர் எனக்கு ஒத்துப் போய் விடு என்று மிரட்டினார்.
3-வது திருமணம் செய்ய முயற்சி
நான் உன்னை 3-வது திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி எங்களை விட்டு விட்டார். இது தொடர்பாக அப்போதைய போலீஸ் கமிஷ்னரிடம் புகார் செய்தோம். இதையறிந்த ராஜகோபால் தனது அடியாட்களுடன் மீண்டும் எங்களை மிரட்டினார்.
பிரின்ஸ் கடத்தல்
போலீஸிலா புகார் செய்கிறீர்கள் என்று மிரட்டிய அவர்கள், என்னையும், கணவர் சாந்தகுமாரையும் காரில் கடத்திச் சென்றனர். திருநெல்வேலிக்குக் கடத்திச் சென்ற பின் என்னை விட்டு விட்டு, கணவரை வேறு எங்கோ அழைத்துச் சென்று விட்டனர்.
மும்பைக்கு ஓட சொல்லி மிரட்டல்
2001, அக்டோபர் 21ம் தேதி எனது கணவர் போன் முலம் தொடர்பு கொண்டு, அண்ணாச்சியின் ஆளான டேனியல் (கடத்திச் சென்றவர்களில் ஒருவன்) என்னை மும்பைக்கு சென்றுவிடுமாறு மிரட்டுவதாகக் கூறினார். அதன் பின்னர் அவர் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.
கொடைக்கானலில் பிரின்ஸ் உடல்
இதையடுத்து நவம்பர் 10ம் தேதி நான் போலீஸில் புகார் கொடுத்தேன். டிசம்பர் 1ம் தேதி கொடைக்கானலில் அடையாளம் தெரியாத பிணம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்து அங்கு சென்று அது என் கணவர்தான் என்று அடையாளம் காட்டினேன். எனது கணவரைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடைக்கானலில் பிணத்தைப் போட்டது ராஜகோபாலும், அவரது அடியாட்களும்தான்.
இவ்வாறு ஜீவஜோதி கண்ணீர்மல்க வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.