அன்று சையது அன்வர்.. இன்று ஜோ ரூட்.. சென்னை ரசிகர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது!
சென்னை: சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ தெரியவில்லை.. ஒரே தட்டில், கசப்பும், இனிப்பும் கலந்து உணவு கொடுக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக அவ்வப்போது வாய்க்கிறது.
இன்றும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கண்டு களித்த ரசிகர்கள் மறுபடியும் அதே உணர்வை பெற்றுள்ளனர்.
ஆம்.. "மறுபடியும்" என்பது மறுக்க முடியாத உண்மை.
ரசிகர்கள் கூட்டம்
தங்களது அபிமான நட்சத்திரங்கள் அனைவரும் விளையாடுவதால், மிகவும் ஆர்வமாக இருந்தனர் சென்னை ரசிகர்கள். மைதானம் முழுக்க ரசிகர்கள் ஆரவாரத்தால் நிரம்பி போயிருந்தது. முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. வெறித் தனமான சேஸிங் இருக்கும் என்று நம்பி இருந்தனர் ரசிகர்கள்.
ஆனால் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் சையது அன்வர், இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ரன்களை குவிக்க தொடங்கினார்.
ஜெயசூர்யா, சந்தர்பால், அன்வர்
அந்த காலகட்டத்தில் சில இடது கை ஆட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராக மட்டும் மிக ஆக்ரோஷமாக ஆடுவார்கள், தங்கள் முழு திறமையை காட்டுவார்கள். இலங்கையின் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் சந்தர்பால், வரிசையில் இந்த பட்டியலில், முக்கியமான இடதுகை பேட்ஸ்மேன், பாகிஸ்தான் அணியின் சையது அன்வர். இந்தியாவுடனான போட்டிகள் என்றால் மட்டும் அவர் வேறு மாதிரி மாறிவிடுவார். அன்றும் அப்படித்தான் நடந்தது.
கங்குலி பிடித்த கேட்ச்
வெறும் 146 பந்துகளில் 194 ரன்கள் எடுத்தார் சையது அன்வர். இதில் 22 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் ஆகியவை அடக்கம். அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய அதிரடி ஆட்டம். மேலும், அது வரை ஒருநாள் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் 200 ரன்களை தாண்டியது கிடையாது. அதையும் தாண்டி விடுவாரோ, அந்த அவப்பெயர் இந்திய பவுலர்களுக்கு தான் கிடைக்கப் போகிறதோ என்று மனம் நொறுங்கி இருந்தனர் ரசிகர்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கர் வீசிய ஒரு பந்தை தூக்கி அடிக்க சையது அன்வர் முயற்சி செய்தபோது, சௌரவ் கங்குலி ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். மிகவும் கஷ்டப்பட்டு பிடித்ததன் காரணமாக கங்குலி பின்னந்தலையில் அடிபட்டது. மைதானத்தில் இருந்து, கங்குலி வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.
அன்வர் புதிய ரெக்கார்ட்
194 ரன்களில் அவுட்டானார் அன்வர். அப்போது ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் அதுதான். அன்வர் பெவிலியன் திரும்பியபோது சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். என்னதான் எதிரணி வீரர் புதிய சாதனை படைத்தாலும், அதுவும் பரம எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியின் வீரர் சாதனை படைத்தாலும், மிகவும் பெருந்தன்மையோடு எழுந்து நின்று சென்னை ரசிகர்கள் கைதட்டியது அப்போது உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் முன்னுதாரணமாக பேசப்பட்டது.
இந்திய அணி தோல்வி
இந்த போட்டியில் ராகுல் டிராவிட் சதம் அடித்தாலும் கூட இந்திய அணி 292 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், 35 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஒரு மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு சென்னை ரசிகர்களுக்கு கிடைத்தது சந்தோசம் என்றாலும், எதிரி அணி வெற்றி பெறுவதற்கு அந்த ஆட்டம் உதவியது என்பது சென்னை ரசிகர்களுக்கு ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம். அதனால்தான் ஒரே தட்டில் இனிப்பும், கசப்பும் வைக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வை சென்னை ரசிகர்கள் அடைந்தனர்.
ஜோ ரூட் இரட்டை சதம்
இன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், 200 ரன்களை விளாசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அசத்திய நிலையில், சொந்த மண்ணில் இங்கிலாந்தை எளிதாக புரட்டிப்போடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுவும் பல காலத்திற்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் ஆர்வத்தோடு சென்றனர். ஆனால் ஜோ ரூட் 200 ரன்களை தாண்டி 218 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
சென்னை ரசிகர்கள் மனநிலை
ஒருபக்கம் மிகச் சிறந்த ஆட்டக்காரரின், திறமையை நேரடியாக பார்த்து மகிழும் ஒரு வாய்ப்பு கிடைத்தபோதும், இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு ஜோ ரூட் நங்கூரம் போட்டு ஆடியது சென்னை ரசிகர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியான விஷயம்தான். ஜோ ரூட்டுக்கு இது 100வது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பாகும். 2005ம் ஆண்டு பெங்களூர் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக் விளாசிய 184 ரன்கள்தான், 100வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை ஜோ ரூட் இன்று முறியடித்துள்ளார். ஆனால் இந்த ஆட்டம் 1997ம் ஆண்டு, சையது அன்வர் ஆட்டம் போல ஜீரணிக்க முடியாத அளவுக்கு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்காது என்று நம்பலாம். ஏனெனில் ஐபிஎல் வந்துவிட்ட பிறகு ரசிகர்கள் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஆட்டத் திறமையை மட்டுமே பெரும்பாலான ரசிகர்கள் பார்க்கிறார்களே தவிர அவர் எந்த நாட்டுக்காரர் என்பது இப்போ மேட்டரே இல்லை.. சரிதானே..