"பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு.." ஜான் பாண்டியன் திடீர் பல்டி.. எடப்பாடிக்கு பெரிய ஷாக்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாகத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் காலையில் கூறியிருந்த நிலையில், திடீரென அவர் மாலையிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் காங்கிரஸின் திருமகன் ஈவேரா. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆன இவர், கடந்த 4ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார்.
அவர் மறைந்ததைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அத்துடன் இங்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இரட்டை இலை வேட்பாளருக்கே ஆதரவு.. ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து போட்டியிட வேண்டும்- ஜான் பாண்டியன்
ஈரோடு இடைத்தேர்தல்
வரும் பிப்ரவரி 27இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 2இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது..தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக
அதேநேரம் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட நிலையில், இந்த முறை யார் போட்டியிடுவார் என்பதில் குழப்பம் தொடர்கிறது. அதிமுக இந்த தொகுதியில் போட்டியிடத் தமிழ் மாநில காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துவிட்டது. அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரு அணிகளாக இருக்கும் நிலையில், இரு தரப்பும் வாக்காளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். மேலும், பாஜகவும் இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜான் பாண்டியன்
இதனால் அதிமுக கூட்டணியில் இன்னுமே யார் போட்டியிடுவார்கள் என்பதில் தெளிவான பதில் இல்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி இன்று காலை அதிமுக மூத்த நிர்வாகிகள் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனை சந்தித்துப் பேசினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் உள்ளது எனத் தெரிவித்தார்.
காலையில் ஒரு கருத்து
மேலும், இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்குதான் ஆதரவு கொடுக்க முடியும் அதில் தெளிவாக உள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக நிறுத்தும் வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபடுவோம் என்றும் தெரிவித்தார். இது எடப்பாடி தரப்பில் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், மாலையிலேயே அவர் தனது நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அதன் பின்னர் ஓபிஎஸும் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து ஜான் பாண்டியனும் பாஜக தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்,
மாலையில் ஒரு கருத்து
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனைச் செய்து வருகிறது. அதிமுகவில் இரு தரப்பும் ஒன்றாகச் சேர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.. யார் நிற்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வம் தரப்பும் முடிவு எடுத்துவிட்டனர். பாஜக தரப்பில் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.
எடப்பாடி அதிர்ச்சி
அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதைப் பொறுத்தே நம் முடிவு அமையும். கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்க முடிவு எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார். காலையில் இரட்டை இழைக்கு ஆதரவு அளிப்பதாக ஜான் பாண்டியன் கூறியிருந்தார். இப்போது மாலையே தனது முடிவை மாற்றிக் கொண்டு பாஜகவின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு என்று கூறியுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.