2 வது ரயிலில் வந்த 25 லட்சம் லிட்டர் குடிநீர்... சென்னையில் விநியோகிக்கப்பட்ட இடங்களை தெரியுமா?
அம்பத்தூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-வது முறையாக கொண்டுவரப்பட்ட தண்ணீர் திருவல்லிக்கேணி, ராயபுரம் பகுதி மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இதுவரை 2 ரயில்கள் மூலம் சென்னைக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் வந்திருக்கிறது.
சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையிலிருந்து தென்னக ரயில்வேயின் உதவியுடன் ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 12-ந்தேதி 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தலா 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 டேங்கர்களுடன் 2-வது ரயில் நேற்று மதியம் வில்லிவாக்கம் வந்தது. இந்த ரயில் தண்ணீர் குழாய் மூலம் அயனாவரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் பகுதிகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதுதவிர திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், ராயபுரம் பகுதிகளுக்கு லாரி மூலமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஒரு ரயிலில் தண்ணீர் நிரப்புவது, ரயில் பயணம் ஆகியவற்றுக்கு 13 மணி நேரம் ஆகிறது. முதல் கட்டமாக தினமும் 2 ரயில்கள் மூலம் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. படிப்படியாக தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.