ஜோதிகாவோ, மதுவந்தியோ.. அதற்காக இப்படியா பேசுவது? எல்லை மீறும் பெர்சனல் அட்டாக்குகள்.. ஷாக் விமர்சனம்
மலிவான விமர்சனங்கள், தனிநபர் தாக்குதல்களையும் தவிர்க்க வேண்டும்
சென்னை: மிக மலிவான வார்த்தை தாக்குதல்களை நம் மக்களில் சிலர் கடுமையாக தொடுக்க ஆரம்பித்துள்ளது வேதனையை தந்துவருகிறது.. குறிப்பாக சோஷியல் மீடியாவில் இது எல்லைமீறி கொண்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மூத்த நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தியின் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. நாட்டிய நாடகம் போல தெரிகிறது.. அந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதில் மதுவந்தியின் நடை, உடை, பாவனைகள், முக தோற்றங்களை வைத்து கிண்டல் செய்தும் வருகின்றனர்.. வேலை வெட்டியை விட்டுவிட்டு இது ஒரு சமாச்சாரம் என்று எடுத்து வைத்து கொண்டு மீம்ஸ்களை போட்டு அதை ஷேர் செய்தும் வருகின்றனர். அதற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து லைக்குகளையும், கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். எதையோ வெட்டி முறித்து சாதித்ததைபோல, இதில் ஒரு திருப்தியும் அடைந்து கொள்கிறார்கள்!!
உருவம்
இதுதான் வருத்தமாக உள்ளது.. மதுவந்தி யார்? யாரும் எதையும் கருத்து சொல்ல தனிமனித உரிமை உள்ளது.. அப்படி ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு பதில் கருத்தை முன்வைக்க வேண்டுமே தவிர, இப்படி திராணி இல்லாமல் உருவத்தை வைத்து கேலி செய்வது எந்த விதத்தில் நியாயம்? மதுவந்தி என்பவர் தர்மதுரை, கடம்பன், ஷிவலிங்கா, தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.. மேடை நாடகங்களிலும் நடித்து வருபவர்.. ஒரு பள்ளி நிர்வாகி.. நடன கலைஞர் என முகங்களை கொண்டவர்.
வாதங்கள்
அவர் பேசியது சர்ச்சையாகவே இருந்தாலும், அல்லது முழுக்க முழுக்க தவறாகவே இருந்தாலும், பதில் கருத்தால்தானே அதை எதிர்கொள்ள வேண்டும்? ஒரு கருத்து முன்வைத்தால், அதற்கு சரியான, தர்க்க ரீதியான வாதங்களை முன்வைக்காமல் உருவத்தையும், அழகையும் கொண்டுவந்து விமர்சிப்பது முற்றிலும் தவறு... இழிவான விமர்சனங்கள் எந்த விதத்திலும் சரியான தீர்வாக இருக்காது.
கண்ணியம்
இதேதான் ஜோதிகா விஷயத்திலும் நடந்தது.. அவரது விமர்சனங்களை பாசிட்டிவ் விமர்சனங்களால் எதிர்கொள்ளவே இல்லை.. கருத்துரிமை அடிப்படையில் கண்ணியமான விமர்சனங்கள் முன்வைக்கப்படவும் இல்லை.. ஜோதிகா குடும்பத்தை அக்கு வேறு, ஆணி வேறாக பிரித்துவிட்டனர்.. ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையையும் சேர்த்து இழுத்து கொண்டு வந்து பேசுவது அநாகரீகத்தின் வெளிப்பாடு.. மலிவான வாக்குவாதங்களும், மிக மோசமான வார்த்தை தாக்குதல்களும் வீசப்படுவது வருத்தமான ஒன்று!!
தமிழிசை
எப்போது தமிழிசை சவுந்தராஜனை சோஷியல் மீடியாவில் சித்தரித்து விமர்சித்தார்களோ அப்போதே இதற்கெல்லாம் ஒரு கடிவாளத்தை போட தவறிவிட்டோம்.. இவர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் சாதனையாளர்கள்.. தமிழிசையின் உருவத்தை கேலி செய்தவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்.. கேலி செய்யப்பட்ட தமிழிசையோ அனைத்தையும் துணிச்சலுடன் கடந்து ஒரு மாநில ஆளுநராக உயர்ந்துள்ளார். இவர்கள் யாருமே சளைத்தவர்கள் இல்லை.. படிப்பு, திறமை, சாதனை என்று அசாத்தியங்களை முன்வைத்து வருபவர்கள்!!
தனிமனித ஒழுக்கம்
ஜோதிகாவாக இருந்தாலும் சரி, மதுவந்தியாக இருந்தாலும் சரி, இவர்கள் பேசிய கருத்துக்கள் சரி, தவறு என்ற வாதத்துக்குள் நாம் போக தேவையில்லை.. ஆனால் கண்ணியம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மிக அவசியம்.. உருவம், கேலி, உடல் அமைப்பு, தனிப்பட்ட வாழ்க்கை என்று உள்ளே புகுந்து அலசி ஆராய்ந்து விமர்சிப்பது என்பது கருத்தியல் ரீதியான சரியாக மட்டுமில்லை, அது தார்மீக உரிமையும் இல்லை.. வக்கற்ற, திராணியற்ற விமர்சனங்களை தவிர்த்து, தர்க்கரீதியாக வாதாடி வெற்றி பெறுவதே சிறந்தது.. எந்த சூழலிலும் தனிமனித ஒழுக்கத்தை இழந்துவிடக்கூடாது என்பதே நம் எதிர்பார்ப்பு!!