பாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா? சீறும் மூத்த பத்திரிகையாளர்!
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் தோல்வியை அரசியலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டாடுவது 'அபாயம்' என எச்சரித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் விஜய்சங்கர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. இதை கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமிஷ்தாவோ, பாகிஸ்தான் மீதான இன்னொரு தாக்குதல் என கூறியிருக்கிறார். அமித்ஷாவின் இந்த கருத்து சர்ச்சையாகி உள்ளது.
பிரண்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர் இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
"பாகிஸ்தான் மீது மற்றுமொரு தாக்குதல். அதே விளைவு" என்று குதூகலப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்தியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
வெற்றியைக் கொண்டாடுவதில் பிரச்சினை இல்லை. அதை அரசியலாகப் பார்த்து 'தேசபக்தியை' வளர்ப்பதுதான் அபாயம்.
அப்படிப் பார்த்தால் அபத்தமான முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும்.
இது வரை இரு நாடுகளுக்கும் இடையே நடந்திருக்கும் 59 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 12 இலும் இந்தியா 9இலும் வென்றிருக்கின்றன.
131 ஒரு நாள் போட்டிகளில் 74 இல் பாகிஸ்தானும், 56 இல் இந்தியாவும் வென்றிருக்கின்றன.
பாட்டில் தோற்று விட்டால் இந்தப் பாண்டிய நாடே எனக்கு அடிமை என்கிற மன நிலையிலிருந்து மீளவில்லை இந்த வித்யாசாகர்கள். இதில் விசேஷம் என்னவென்றால் கிரிக்கெட் வீரர்கள் அந்த மேட்சை மற்றொரு போட்டியாகத்தான் பார்த்திருக்கிறார்கள்.
ஆட்ட களத்திற்குள் செல்லும் முன் அணி சகாக்களிடம் என்ன சொல்வீர்கள் என்று தோனியைக் கேட்ட போது அவர் சொன்னது: Guys, enjoy the game.
அதாவது விளையாட்டை மகிழ்ச்சியாக அனுபவித்து ஆடுங்கள்.
இவ்வாறு விஜயசங்கர் பதிவிட்டுள்ளார்.