நாளை நமதாக இருக்கும் என்று நம்புகிறேன்.. ஸ்டெர்லைட் தீர்ப்பு பற்றி கமல்ஹாசன் ட்வீட்
சென்னை: நாளை நமதாக இருக்கும் என்று நம்புகிறேன் என ஸ்டெர்லைட் வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.
2018 மே 22 ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 2018 மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது.
அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.
மதுக் கடைகளில் கொரோனா தென்படாததால் சென்னையில் திறக்கப்படுகிறதா சாராய அணை மதகுகள்- கமல்ஹாசன் பொளேர்
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
2019 பிப்ரவரி 27 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019 ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8 ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு அளிக்கின்றது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு.. ஹைகோர்ட் நாளை தீர்ப்பு
இந்த நிலையில், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக... உங்கள் நான். இவ்வாறு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.