உயர் நீதிமன்ற நீதிபதியாக தமிழக முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி பதவியேற்பு!
சென்னை: தமிழக முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.
நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தஹில்ரமணி, புகழேந்திக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்னும் 2 வருடங்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக புகழேந்தி பதவி வகிப்பார்.
பதவியேற்பு விழாவில், ஹைகோர்ட் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன் மற்றும் கே.என்.பாஷா ஆகியோரும் கூட பங்கேற்றனர்.
புதுச்சேரி அரசு சட்ட கல்லூரியில் சட்டக் கல்வி முடித்த புகழேந்தி, 1990ல் வழக்கறிஞராக பதிவு செய்து, விசாரணை நீதிமன்றங்களில் 1993ம் ஆண்டு வரை பணியாற்றினார். 1993ல் அப்போதைய நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் அலுவலகத்தில், பணிக்கு சேர்ந்தார். பிறகு தமிழக மின்சார வாரிய நிலைக்கவுன்சில் உறுப்பினராக இருந்தார். 2011ல் அரசு சிறப்பு வழக்கறிஞராக புகழேந்தி நியமிக்கப்பட்டார். கிரானைட் குவாரி தொடர்பான வழக்குகளில் இவர் வாதிட்டுள்ளார்.
பதவியேற்பு விழாவில் நீதிபதி புகழேந்தியை, தமிழக அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் வாழ்த்தி பேசுகையில், சிறப்பு வழக்கறிஞராக புகழேந்தி பதவிவகித்த காலத்தில், அரசு எந்த வழக்கிலும் தோற்றதே கிடையாது. 372 வழக்குகளில் புகழேந்தி குழு வெற்றி தேடி தந்தது என்றார்.
2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கான தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரலாக புகழேந்தி நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்திலும் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
நீதிபதி புகழேந்தி பதவியேற்புக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலம் 60ஆக உயர்ந்துள்ளது.