அன்று ஜெயலலிதா.. இன்று நித்யானந்தா.. தொடர்ந்து அதிரடி காட்டிய நீதிபதி குன்ஹா
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இதைத் தொடர்ந்து அவர் நித்யானந்தா விவகாரத்திலும் அதிரடி காட்டியுள்ளார்.
தமிழக முதல்வராக 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமான ரூ 66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் 18 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதில் 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பதவி இழந்தார்
மேலும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதத் தொகையை விதித்த குன்ஹா, மற்ற 3 பேருக்கும் தலா 10 கோடி விதித்தார். இந்த அதிரடி உத்தரவை அடுத்து தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்தது. இதையடுத்து ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். உடனே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது.
விடுவிப்பு
இதையடுத்து அவர் சிறைக்கு சென்றிருந்தார். பதவியில் உள்ள ஒரு முதல்வர் சிறைக்கு சென்றது இதுவே முதல் முறை என்பதால் குன்ஹா தீர்ப்பு பெரிதும் பேசப்பட்டது. இதையடுத்து ஜாமீன் பெற்றது, மேல்முறையீட்டில் நீதிபதி குமாரசாமி இவர்களை விடுவித்தது இதெல்லாம் தனிக் கதை. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது குன்ஹாவின் தீர்ப்பை கடந்த 2017-ஆம் ஆண்டு உறுதி செய்தது. அப்போது ஜெயலலிதா காலமாகிவிட்டதால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
தேடப்படும் குற்றவாளி
சுப்ரீம் கோர்ட்டுக்கு போன போதிலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு சும்மா "கன்" மாதிரி நின்றது. அதே போல் அதிரடியை மற்றொரு வழக்கிலும் குன்ஹா காட்டியுள்ளார். ஆம் நித்யானந்தாவின் வழக்கில். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கியது கர்நாடக ஹைகோர்ட். இந்த நிலையில் சிறுமிகளை அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் அடைத்து வைத்ததாக எழுந்த புகாரில் அவர் தேடப்பட்டு வருகிறார்.
வெளிநாட்டில்
இந்த நிலையில் அவர் யாரிடமும் சிக்காமல் வெளிநாட்டில் மறைந்திருக்கிறார். இன்டர்போல் துணையுடன் அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸும் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனாலும் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளதால் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இந்த நிலையில் பாலியல் வழக்கில் அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கில் இன்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. அதில் நித்தியின் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டவர் ஷாட்ஷாத் நீதிபதி குன்ஹா. அதிரடி காட்டுவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.