43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் அன்பழகன் மட்டுமே.. பின்னணி என்ன?
சென்னை: 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் க அன்பழகன் மட்டுமே ஆவார்.
Recommended Video
திமுகவின் ஆளுமை பதவிகளில் ஒன்றான கழக பொதுச் செயலாளர் பதவியில் நீண்ட காலம் நீடித்தவர் க அன்பழகன் ஒருவரே. தன் வாழ்நாள் முழுவதையும் திமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் செலவிட்ட பேராசிரியர் க அன்பழகன் இன்று நம்மோடு இல்லை.
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் க அன்பழகன். இவரது தந்தை கல்யாணசுந்தரம், தாய் ஸ்வர்ணாம்பாள். இவர்களுக்கு டிசம்பர் 19, 1922-ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ராமையா.
பேராசிரியர்
இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அண்ணா மீது அளவற்ற ஈர்ப்பு கொண்டிருந்தார். தொடக்கத்தில் பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக இருந்த அன்பழகன் நீதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு முழு நேர அரசியலில் இருந்தார். பட்டுக்கோட்டை அழகிரிசாமி இறப்பின் போது அவரது மாநாட்டில் கலந்து கொண்ட கருணாநிதியும், அன்பழகனும் கடைசி காலத்தில் அழகிரிசாமியை பெரியாரின் திராவிடர் கழகம் கவனிக்கவில்லை என்று குறை கூறினர்.
அண்ணாவுக்கு அடுத்த இடம்
இதனால் பெரியார் அதிருப்தி அடைந்து அவர்கள் இருவரையும் தி.க கூட்டங்கள் பேச தடைவிதித்தார். இதையடுத்து சில மாதங்களிலேயே திராவிடர் கழகம் உடைந்து திமுக உருவானது. 1957 இல் முதல் முறையாக தேர்தலில் எழும்பூரில் போட்டியிட்ட அன்பழகன் வெற்றி பெற்றார். பின்னர் திமுக சட்டசபை குழுவின் தலைவராக அண்ணாதுரையும் துணை தலைவராக அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டனர். திமுக தொடங்கிய போது அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அன்பழகன்.
திருச்செங்கோடு
1962-ஆம் ஆண்டு எழும்பூர் தொகுதியில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் அன்பழகன். இதையடுத்து அவரை சட்டமேலவைக்கு அனுப்பினார் அண்ணா. 1967-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கருணாநிதியை முதல்வர் பதவிக்கு வழிமொழிந்தவர்களில் அன்பழகனும் ஒருவர்.
எம்ஜிஆர் நீக்கம்
திமுகவின் தலைவராக கருணாநிதியை தேர்வு செய்ய இவர் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதையடுத்து அதிருப்தியாளர்கள் கட்சியில் இருப்பதை விட விலகுவதே நல்லது என தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சி மாநாட்டின் செலவு குறித்து கணக்கு கேட்டதால் திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
43 ஆண்டுகள்
இதையடுத்து பொருளாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டார். அது போல் பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் 1977-ஆம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கினார். அப்போது பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதியானவர் என கருணாநிதி கருதியது அன்பழகனைத்தான். அன்றைய தினம் முதல் 43 ஆண்டுகளாக திமுக பொதுச் செயலாளராக க அன்பழகன் மட்டுமே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியை அண்ணாவும் , நெடுஞ்செழியனும் அன்பழகனை விட குறைவான ஆண்டுகளே பதவியில் இருந்தனர்.