தந்தையை போல துணை நிற்கிறார்.. பேராசிரியர் அன்பழகனுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
சென்னை: தனக்கு தந்தையை போல துணை நிற்பவர் க. அன்பழகன் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு இன்று 97வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையே கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டுக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
முதுமை மற்றும் கஜா புயல் பாதிப்பு காரணமாக, க.அன்பழகன் தன்னை, யாரும் சந்திக்க வர வேண்டாம், விழா கோலாகலங்கள் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்று, ஸ்டாலினும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். எனவே அன்பழகனை சந்திக்க தொண்டர்கள் யாரும் செல்லவில்லை.
இதனிடையே, க.அன்பழகனை வாழ்த்தி இன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரியாரின் தன்மானம் செறிந்த பகுத்தறிவு - சுயமரியாதை நெறியில், அண்ணாவின் இனம் - மொழி, விடுதலை உணர்ச்சி தரும் வேகத்துடன் தலைவர் கருணாநிதியின் சமூக நீதி - சமத்துவக் கொடியை இந்தத் தள்ளாத வயதிலும், சிறிதும் தளராமல் தாங்கிப் பிடித்து ஓங்கி உயர்ந்து வருபவர் க.அன்பழகன்.
கருணாநிதியின் இளம் வயதில் திருவாரூரில் நடைபெற்ற சிக்கந்தர் விழாவில் அண்ணாவுடன் வருகை தந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய மாணவரான இன்றைய பேராசிரியர் ஆற்றிய உரையும், அப்போது நடந்த சந்திப்பும் தலைவர் கருணாநிதியின் இறுதி மூச்சு இருக்கும் வரை கொள்கை உறவாக நீடித்து இயக்கத் தோழமையாகத் தொடர்ந்ததை தூய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.
பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டிய கார்ல் மார்க்சுக்கு உற்ற துணையாக விளங்கிய ஏங்கல்ஸ் போல, சமூக நீதிக்கொள்கையை நிலைநாட்டிட மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்ற துணையாக எப்போதும் உடன் இருந்தவர் அன்பழகன்.
எங்கள் திராவிடத் தத்துவ ஆசானுக்கு அகவை 97!
— M.K.Stalin (@mkstalin) December 19, 2018
இளைஞரணியை நான் வழிநடத்தியபோது தலைவர் கலைஞரின் தோழனாய், கம்பீரக் குரலில் கொள்கை வகுப்பெடுக்கும் பேராசிரியரின் உரை இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.
தமிழாய், தந்தையாய் எங்களை வழிநடத்தும் இனமான பேராசிரியரே நூறாண்டுகள் கடந்து வாழ்க! pic.twitter.com/FbyynE23iA
இப்போதும் அந்தக் கொள்கையை உறுதிபடக் காத்திடவும், திமுகவின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்தவும் உங்களின் ஒருவனான எனக்கு எப்போதும் தந்தையைப் போல் துணைநிற்கிறார்.
97 வயதிலும் உள்ளத்தில் உறுதி குறையாமல் உற்சாகம் தளராமல் பாடுபட்டு வரும் பொதுச் செயலாளர், தலைவர் மேல் வைத்துச்ள்ள அளவற்ற பற்றையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தான் ஊன்றுகோல் துணையுடன் மேடையேறி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்கு முன்னிலை வகித்தார். தலைவரின் சிலை திறப்பு விழாவில் அவர் காட்டிய ஆர்வமும், அக்கறையும் அன்பின் வற்றா ஊற்று.
அவரின் பிறந்த நாளில், புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பணிகளையும் எளிய மக்களுக்கான நல உதவிகளையும் திமுகவினர் வழங்கி சிறப்பிக்க வேண்டும். திராவிடத் தத்துவ ஆசான் பேராசிரியர் அன்பழகன், நூற்றாண்டை கடந்தும் நம் அனைவரையும் வழிநடத்தும் விழிகளாக விளங்கிட விரும்புகிறேன். வாயார வாழ்த்தி மனமார வணங்குகிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.