அன்பழகனும் விடை பெற்றார்.. கண்ணீர்க் கடலில் திமுக.. இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
சென்னை: மறைந்த திமுக பொதுச் செயலாளர் க அன்பழகனின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார்.
Recommended Video
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு வந்தார். பின்னர் அவரது உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஸ்டாலினிடம் விளக்கினர். செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அன்பழகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் காலமானார். அவருக்கு வயது 98.

அரைக்கம்பத்தில் கொடி
அன்பழகனின் மறைவால் திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் திமுக கொடிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இல்லம்
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு, ஆ ராசா, எ வ வேலு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் கே வீ தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், வசந்தகுமார் எம்பி, கனிமொழி, துர்கா ஸ்டாலின், செல்வி, ராசாத்தியம்மாள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, ஸ்டாலின் மகள் செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு பொதுமக்களும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம்
அவரது உடல் கீழ்ப்பாக்கம் அருகே வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் வீட்டிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி, டிஆர் பாலு, பொன்முடி, திருச்சி சிவா, ஆ ராசா, வைரமுத்து, உதயநிதி உள்ளிட்டோர் பேராசிரியரின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

மாசில்லா நட்பு
இதையடுத்து க அன்பழகனின் உடல் வேலங்காடு மின் மயானத்தை அடைந்தது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் க அன்பழகனுக்கு கண்ணீருடன் பிரியாவிடை தந்தனர். மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்ற க அன்பழகன், அங்கு நண்பர் கருணாநிதியை சந்தித்து அங்கும் இருவரது மாசில்லா நட்பு தொடரும்!












Click it and Unblock the Notifications