தலைமை செயலகமாகிறதா ஓமந்தூரார் மருத்துவமனை?.. கொரோனா காலத்தில் இப்படி செய்யலாமா?.. கே சி பழனிசாமி
சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாக மாறுவதாக வெளியான செய்திக்கு முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் 10 ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றுவது தமிழக மக்களுக்கு பேரிழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை அண்ணா சாலையில் உள் ஓமந்தூரார் அரசு அலுவலக வளாகத்தில் புதிய சட்டசபை வளாகம் 629 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என 2007 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்திருந்தார். இதையடுத்து 2008 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த புதிய கட்டடத்தை எதிர்த்து அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இடி மின்னலுடன் 5 நாட்களுக்கு மழை வெளுக்கும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
அரங்கம்
இதையடுத்து அந்த வளாகத்தில் 2000 இருக்கை வசதிகள் கொண்ட அரங்கமும், 500 வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடத்தை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி கலந்து கொண்டார்.
தேர்தல்
அந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த கட்டடத்தில் சட்டசபை தொடங்கியது. இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அதிமுக ஆட்சி வந்தவுடன் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு தனது தலைமை செயலகத்தை மாற்றியது. மேலும் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சட்டசபை மருத்துவமனையாகவும் தலைமைச் செயலகம் மருத்துவ கல்லூரியாகவும் மாற்றப்படும் என முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
மருத்துவமனை திறப்பு
இதையடுத்து 6 மாடிகளை கொண்ட மருத்துவமனை 2014 ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்டு தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு நிறைய ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது. ஆய்வகங்கள், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ளன. புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மக்கள் போற்றும் இந்த அரசு மருத்துவமனை தற்போது திமுக ஆட்சியில் தலைமை செயலகமாக மாறும் என தகவல்கள் வெளியாகின.
சட்டசபை தலைமைச் செயலகம்
இந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டப்பேரவை தலைமைச் செயலக வளாகம் என கல்வெட்டு அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அந்த பழைய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் கல்வெட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவினர் ககடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் எம்பி
இதுகுறித்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தனது ட்விட்டரில் கூறுகையில் தலைமை செயலகமாகிறதா #ஓமந்தூரார் மருத்துவமனை? 10 ஆண்டுகளாக மருத்துவமனையாக செயல்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாகிறதா. சட்டசபையை தற்போதைய இடத்தில் கூட நடத்த முடியும்.
வன்மையாக கண்டிப்பு
ஆனால் கொரோனா போன்ற பெருந்தொற்று உள்ள இந்த காலகட்டங்களில் மக்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றுவது தமிழ்நாட்டு மக்களுக்கு இழப்புதான். மருத்துவமனையை தலைமை செயலகமாக மாற்றும் திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.