அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கமா?.. சஸ்பென்ஸ் வைத்த ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவின் பொருளாளராக ஓபிஎஸ் நீடிக்கப்படுவாரா இல்லை நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழு வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. அவைத் தலைவரால் பொதுக் குழுவை கூட்ட முடியாது என ஓபிஎஸ் தரப்பு சொல்கிறது. எனவே ஜூலை 11 ஆம் தேதி கூட்டம் நடைபெறாது என ஓபிஎஸ் தரப்பு அடித்துச் சொல்கிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு முடிந்தவுடன் டெல்லிக்கு புறப்பட்டார் ஓபிஎஸ். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டும் நேரம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அமாவாசைக்கு காத்திருந்த ஓபிஎஸ்.. முந்திய எடப்பாடி 'போச்சே’ அதே இடத்தில் போட்டி கூட்டம்- பரபர பிளான்!
பாஜக மூத்த தலைவர்கள்
ஆனாலும் தான் போனதற்கான விஷயத்தை பாஜக மூத்த அமைச்சர்களின் காதில் போட்டுவிட்டு வந்திருக்கிறார் என்றே தெரிகிறது. நேற்றைய தினம் சென்னை திரும்பிய ஓபிஎஸ் அவசர அவசரமாக பெரியகுளத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி
இந்த நிலையில் தேனி சென்ற போது அவருக்கு பாஜக நிர்வாகிகள் காவித் துண்டை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கோபத்தையும் குஷியையும் கொடுத்தது. இந்த நிலையில்தான் அவசர அவசரமாக எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஒரு மணி நேரம் ஆலோசனை
அதில் இன்றைய தினம் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நிச்சயமாக ஓபிஎஸ்ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. அதன்படி இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு மூத்த நிர்வாகிகள் வந்தனர்.
இபிஎஸ்ஸுக்கு உற்சாக வரவேற்பு
வளர்மதி, சி வி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே பி முனுசாமி உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதையடுத்து கூட்டத்திற்கு புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்ஜிஆர் மாளிகை முழுக்க கூட்டம் நிரம்பி வழிகிறது.
11 ஆம் தேதி தெரியும்
இந்த தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. மூத்த, முன்னாள் அதிமுக நிர்வாகிகளும் இந்த கணிப்பையே முன் வைத்திருந்தனர். அவ்வாறு நீக்கப்படும் பட்சத்தில் கே பி முனுசாமியை பொருளாளராக நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்களை ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் வசம் உள்ள பொருளாளர் பதவி பறிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூட்டத்தில் நிறைய முடிவுகள் எடுத்தோம். அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது. உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் பதில் கிடைக்கும் என்றார்.