தி.மு.க.வில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக டிஸ்மிஸ்- மு.க. ஸ்டாலின்
சென்னை: திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுகவின் விவசாய அணியின் மாநில செயலாளராக இருந்தவர் கே.பி. ராமலிங்கம். திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்தவர் கே.பி. ராமலிங்கம்.
திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் கே.பி. ராமலிங்கம். அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் கொரோனா தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளை விமர்சித்து கே.பி. ராமலிங்கம் பதில் அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன்பின்னர் திமுகவில் இருந்து கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கே.பி. ராமலிங்கத்திடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகையால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.