ராஜீவை கொன்று புதைத்தோம் என்ற சீமானுக்கு ஒரு நீதி.. நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா?.. காங்கிரஸ்
சென்னை: ராஜீவ் காந்தியை கொலை செய்து புதைத்தோம் என பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமானை நீங்கள் இன்னும் ஏன் கைது செய்யவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கூட்டம் ஒன்றில், சமீபத்தில், கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பாக ஆட்சேபிக்கதக்க கருத்தை பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரையும், ஒருமையில் விமர்சித்து பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
2020ன் முதல் இரவே செம மழை.. சுவிஸ் போல மாறிய சென்னை சிட்டி.. இன்றும் சூப்பர் மழை இருக்காம்!
3 பிரிவுகளில் வழக்கு
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனரிடம் பாஜக மாவட்ட தலைவர் தயாசங்கர் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று இரவு கைது
நெல்லைக் கண்ணனை கைது செய்யக் கோரி பாஜக நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பெரம்பலூரில் அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
காங்கிரஸ் கண்டனம்
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?
சீமானுக்கு ஒரு நீதியா?
சீமான் பேச்சு குறித்துக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி, அமித்ஷாவுக்கு எதிராகப் பேசினால் உடனடியாக கைது செய்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை. நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.