ப.சிதம்பரம் தடம் மாறமாட்டார்.. மத்திய அரசை பாராட்டியதால் உடனே மோடி ஆதரவா?.. கே எஸ் அழகிரி
சென்னை: முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மோடி முக்கியமான 3 விஷயங்களை பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் குடிநீர் பற்றாக்குறை, காடுகள் அழிப்பு, வீடுகள் இன்மை, ஏழ்மை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றுக்கு மக்கள்தொகை பெருக்கமே காரணம். எனவே குடும்பங்களை சிறிய அளவில் வடிவமைத்து கொள்வது தேச பக்தி சார்ந்த செயல்.
அதிக வரி
அடுத்தது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பூமி தாயை பாதுகாக்க வேண்டும். ரசாயன பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். கடைசியாக செல்வந்தர்கள் மீது மத்திய அரசு அதிக வரியை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ப சிதம்பரம் பாராட்டு
எனவே செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய 92 நிமிட உரையை பேசி முடித்தார். பிரதமரின் இந்த மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்திருந்தார்.
மக்கள் இயக்கம்
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் கூறியிருக்கையில் சிறிய குடும்பம் அமைத்தல், செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக்குக்கு தடை உள்ளிட்ட மூன்று அறிவிப்புகளை நான் வரவேற்கிறேன். இதில் முதல் இரண்டு அறிவுரைகள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார்.
ப .சிதம்பரம்
இத்தனை காலமாக மோடியை எதிர்த்து வந்த ப. சிதம்பரம் திடீரென அவரது திட்டங்களை ஆதரித்ததை திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் விமர்சனம் செய்தனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில், ப. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறமாட்டார்.
ஆதரவு
எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார். மோடியை பாராட்டுவதாலேயே அவருக்கு ஆதரவாக மாறிவிடுவார் என எடுத்துக் கொள்ள முடியாது என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.