காங் அழைத்துவிட்டது.. இணைவாரா? இல்லை வேற வேறயா?.. விஜய்யின் முடிவு என்ன?.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு
சென்னை: நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார வரவேற்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ள நிலையில் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஜினி, கமல், விஜய், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரவர் ரசிகர்களின் விருப்பம் ஆகும். இதில் கமல்ஹாசன் மட்டும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டார்.
ரஜினிகாந்தோ இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கட்சி தொடங்குவதாக, அவர் கூறவில்லை, அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன.
ரஜினி "மல".. அஜித் "தல".. ராஜேந்திர பாலாஜியின் டைமிங் + ரைமிங்.. செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்
வசனம்
சிம்புவை பொருத்தவரை அவரது தந்தை அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பி நேரம் பார்த்து காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு அந்த ஆசை இருக்கிறதா என தெரியவில்லை. அது போல் விஜய்யும் அண்மைகாலமாக தனது திரைப்படங்களிலும் சினிமா விழாக்களிலும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வசனங்களை உச்சரித்தும், பேசியும் வருகிறார்.
விஜய்
இந்த நிலையில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிமுக அரசை விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலும் அவர் பேனர் சரிந்து இறந்த சுபஸ்ரீ விவகாரத்தை கையில் எடுத்து பேசினார். மேலும் யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.
ஹேஷ்டேக்குகள்
இந்த நிலையில் பிகில் பட வசூல் காரணமாக விஜய் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அதுவும் நெய்வேலியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த விஜய்யை அவரது காரில் கூட வர அனுமதிக்காமல் தங்களுடனேயே சென்னை வரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். பனையூரில் உள்ள விஜய் வீட்டில் ரெய்டு நடத்திய நிலையில் அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ 1-ஐ கூட அதிகாரிகள் கைப்பற்றவில்லை. இதனால் விஜய் நேர்மையானவர் என்ற வகையில் சமூகவலைதளங்களில் ஹானஸ்ட் விஜய் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் வைரலாகின.
ராஜேந்திர பாலாஜி
ஒரு பக்கம் அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் ரஜினிகாந்திற்கு நிகர் நடிகர் அஜித்தான், நடிகர் விஜய் அல்ல என கூறிவருகிறார். மற்ற அதிமுகவினரும் விஜய்க்கு எதிராகவே பேசி வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் எச் ராஜா உள்ளிட்டோரும் திரைப்படத்தில் இலவச டிவியை தூக்கி உடைத்தீர்களே எங்கே போனது உங்கள் நேர்மை என விஜய் வீட்டு ரெய்டு குறித்து நக்கலாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அரசியலுக்கு தள்ளப்படுவாரா
இந்த நிலையில் அண்மைக்காலமாக விஜயை காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருகிறது. அத்துடன் அவர் காங்கிரஸில் இணைய கே எஸ் அழகிரி தூண்டிலும் போட்டுள்ளார். ஒரு பக்கம் அதிமுக அரசின் விமர்சனம், மறு பக்கம் வருமான வரித் துறை ரெய்டு. இதனால் நடிகர் விஜய் அரசியலுக்கு தள்ளப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரசிகர்கள்
அப்படியே அவர் அரசியலுக்கு வந்தால் தனிக் கட்சியை தொடங்குவாரா, இல்லை காங்கிரஸ் கொடுத்த ஆஃபரை ஏற்று அக்கட்சியில் சேருவாரா என தெரியவில்லை. ரசிகர்களின் விருப்பம் விஜய் தனிக் கட்சியில் இணைய வேண்டும் என்பதுதான். ஒரு கட்சியில் சேர்ந்தால் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க வேண்டுமே தவிர தனித்து செயல்பட முடியாது. ஒரு வேளை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் விஜய் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்களோ அது நடைபெறாது. பாலில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு கலந்தாலும் எலுமிச்சை சாற்றில் பால் கலந்தாலும் பால் நிச்சயம் கெட்டு போகும்.
உரிய நேரத்தில் பதில்
மற்ற கட்சிகளில் ஊழல் இருப்பதால்தானே கமல் உள்ளிட்ட நடிகர்கள் அரசியலில் ஈடுபட விரும்புகின்றனர். அவ்வாறிருக்கையில் விஜய் மட்டும் எப்படி காங்கிரஸில் இணைவார்?. காங்கிரஸே திமுக கொடுக்கும் சீட்டுகளில் போட்டியிட்டு வருகிறது. எனவே முதல்வர் பதவிக்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை. இதனால் விஜய் தனிக்கட்சியை தொடங்க வேண்டும் என்றுதான் ரசிகர்கள் விரும்புவார்கள். அப்படியே தனிக் கட்சி தொடங்கினாலும் கமல் போல் அதிரடியாக தொடங்குவாரா இல்லை ரஜினி போல் இழுத்தடித்து கொண்டே இருப்பாரா உள்ளிட்ட கேள்விகள் உள்ளன. இதற்கு உரிய நேரத்தில் விஜய் பதிலளித்தால்தான் தெரியும்.