இஷ்டத்திற்கு பேசினால் காங்கிரஸ் கட்சியை யார் மதிப்பார்கள்... கே.எஸ்.அழகிரி வேதனை
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் அனைவரும் ஒரே மாதிரி பேச வேண்டும் என்றும், இஷ்டத்திற்கு அவரவர் பொதுவெளியில் பேசினால் கட்சியை யார் மதிப்பார்கள் எனவும் கே.எஸ்.அழகிரி வேதனை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் மணி சங்கர் அய்யர், மீனாட்சி நடராஜன், சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்ட காணொலிக் காட்சி சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியினர் நிறைய படிக்க வேண்டும் என்றும் வலிமையாக பரப்புரையில் ஈடுபட வேண்டும் எனவும் தனது மன ஓட்டத்தை வெளிப்படுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி!
குஷ்பு கருத்து
ஒரு காலத்தில் கோஷ்டிப்பூசலின் புகலிடமாக இருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி, தற்போது கருத்துப்பூசலின் மையமாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் குஷ்பு கூறியுள்ள கருத்தும், அவரது நிலைப்பாடும் காங்கிரஸில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குஷ்பு மீதான புகார் அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் வரை சென்றுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது மன வேதனையை காணொலிக் காட்சி சந்திப்பில் கொட்டியுள்ளார்.
இரண்டும் இல்லை
தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு சிக்கல்கள் உள்ளதாக கூறிய கே.எஸ்.அழகிரி, கட்சிக்கு அடிமட்டம் வரையில் பலமான அமைப்பு இல்லை என்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து வலிமையாக பிரச்சாரம் செய்யும் சக்தி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் நிறைய படிக்க வேண்டும் என்றும் கருத்தியல் நிறைந்த இயக்கமாக தமிழக காங்கிரஸ் கமிட்டியை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாறி மாறி பேசக்கூடாது
மேலும், கட்சியில் அனைவரும் ஒரே மாதிரி பேசினால் தான் தொண்டர்கள் சோர்வடையமாட்டார்கள் என்றும், இஷ்டத்திற்கு அவரவர் பொதுவெளியில் பேசினால் அது இயக்கத்திற்கு பின்னடைவை தருவதோடு மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் எனக் கூறியுள்ளார். குஷ்புவின் செயல்பாடுகளை மையமாக வைத்து தான் கே.எஸ்.அழகிரி இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உணர்வு தேவை
இப்படி பேசுங்கள், இப்படி நடந்துகொள்ளுங்கள் என கட்சியில் சட்டம் போட முடியாது என்றும், இதை உணர்ந்து ஒவ்வொருவரும் உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை அழுத்தமாக விமர்சிக்க வேண்டும் அதைப்பற்றி பேச வேண்டும் எனவும் அப்போது தான் தமிழகத்தில் வேரூன்ற முடியும் எனவும் கூறியுள்ளார்.