தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் சண்முகம்.. டிஜிபியாக திரிபாதி நியமனம்!
Recommended Video
சென்னை: தமிழகத்தின், புதிய தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையுடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதையடுத்து, புதியதாக நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் 46வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நிதித்துறை செயலாளராக அவர் இருந்து வருகிறார். முன்னதாக, கூட்டுறவு துறை முதன்மை செயலாளராகவும், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர்.
சேலம்தான் சண்முகத்தின் பூர்வீகம். வேளாண் படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1985 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியாகும்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி, அம்மா கேண்டீன் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கி, நிதி சுமையை சிறப்பாக கையாண்டவர் என்ற பாராட்டு பெற்றவர் இவர். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையில் ஒரே பதவியில் பொறுப்பு வகித்தவர் சண்முகம் ஐஏஎஸ் மட்டுமே.
இதேபோல, சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருக்கும், திரிபாதி, புதிய, சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் டெல்லி எம்பில் படிப்பு முடித்தவர். 1985ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி இவர்.
தமிழகத்தில் இதுவரை 9 மாவட்டங்களில் எஸ்பியாக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். சென்னை காவல்துறை கமிஷனராக பதவி வகித்துள்ளார். வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டபோது, இவர் சென்னை கமிஷனராக இருந்தார். ரவுடி வீரமணி என்கவுண்டரிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததாக சொல்லப்படுவதுண்டு. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் திரிபாதி பதவி வகித்திருந்தார். இப்போது காவல்துறையின் உச்சபட்ச பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.