மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க கி. வீரமணி முன்வைக்கும் 4 காரணங்கள்
சென்னை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 4 காரணங்களை முன் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்து கி. வீரமணி வெளியிட்ட அறிக்கை விவரம்:
1) மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை. இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு அண்ணா பெயரில் உள்ள அரசு தன் கடுமையான எதிர்ப்பினைப் பிரகடனப்படுத்த வேண்டும்
2) தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியான நிலைப்பாடு; இந்த நிலையில், மூன்றாவது மொழியைத் திணிப்பது ஏற்கத்தக்கதல்ல - முதற்கட்டத்திலேயே நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று.
புதிய கல்வி கொள்கையில் 3 முதல் 5 வயது வரை மழலையர் கல்வி- வரவேற்புக்குரிய 6 அம்சங்கள்: ஜி.கே.வாசன்
3) 3,5,8-ம் வகுப்புகளுக்கு உரிய ஆணையம் தேர்வு நடத்தும் என்பதை எந்த கல்வியாளர்களும் ஏற்கமாட்டார்கள். 5ஆம் வகுப்பு வரை தேர்வே கிடையாது என்ற நிலையில் இப்படி 3-ம் வகுப்பில் இருந்தே தனி ஆணையம் தேர்வு நடத்தும் என்பது கல்வியின் மீது இளம் பிஞ்சுகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விபரீத திட்டம் ஆகும்.
4) இனி, கல்லூரிகளில் பி.எஸ்.சி, போன்ற இளங்கலை விஞ்ஞானப் படிப்புக்கு கூட என்.டி.ஏ. என்ற ஓர் அமைப்பை அகில இந்திய அளவில் உருவாக்கி அதன்மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படும். நுழைவுத் தேர்வே கூடாது- நீட் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற மக்கள் கருத்து ஓங்கி ஒலித்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் அடாவடித்தனமாக இப்படி ஒரு முறையை திணிப்பது ஏழை மாணவர்கள் 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டது.
மாநில அரசுகளின் கருத்து என்ன என்பதுதான் மிக மிக முக்கியமாகும். கல்வி என்பது வெறும் மத்திய அரசை மட்டும் சார்ந்ததல்ல. மாநில அரசும், மத்திய அரசும் இணைந்த ஒத்திசைவுப் பட்டியலாகும்
இவ்வாறு கி. வீரமணி கூறியுள்ளார்.