உடல் நல பாதிப்பு.. ராம.கோபாலனும், இல.கணேசனும் நலமுடன் திரும்ப வேண்டும்.. கி.வீரமணி அறிக்கை
இல கணேசன், ராமகோபாலன் உடல்நலம் பெற வேண்டும் என்று கி வீரமணி தெரிவித்துள்ளார்
சென்னை: "கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவே கூடாது... ராம.கோபாலனும், இல.கணேசனும் உடல் நலம் பெற்று வரவேண்டும், திரும்பவும் பொதுவாழ்வைத் தொடரவேண்டும் என்று திக தலைவர் கி.வீரமணி வாழ்த்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது வழக்கமாக திமுக, அதிமுகதான்.. ஆனால், இவைகளுக்கு பின்னணியில் அல்லது கூட்டணியில் மத ரீதியான அரசியல் ஒன்று எப்போதுமே இலைமறைகாயாக நடந்து வரும்.
அந்த வகையில் பாஜகவும், திகவும் நேர் எதிரானது.. நேர் முரணனாது.. அடிப்படையே வேறு.. இவர்களுக்குள் பஞசாயத்து வராமல் இருந்தது கிடையாது.. ஏகப்பட்ட சர்ச்சைகளை, விமர்சனங்களை, அறிக்கை போர்களை, வார்த்தை தாக்குதல்களை இந்த தமிழகம் கண்கூடாக கண்ட ஒன்றுதான். அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசனும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் பலமுறை மோதி கொண்டவர்கள்.. காரசாரமாக பேசி கொண்டவர்கள்.
ஒருமுறை "பகவான் கிருஷ்ணர் பற்றி வீரமணி பேசியதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்... தேர்தல் நேரத்திலும் கூட கி.வீரமணி உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவோரை சாடி பேசி வருகிறார்கள்... இந்த பேச்சை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றெல்லாம் சாடினார். அதேபோல, வீரமணியும் பாஜகவை, தாறுமாறாக விமர்சிக்கவே செய்வார்.
ஆனால், இதெல்லாம் வெறும் அரசியல் நிகழ்வுகள்தான்.. இவைகளையும் தாண்டி மனித நேயமும், பாசமும் உள்ளது என்பதை இந்த தலைவர்கள் தற்போது எடுத்து காட்டி உள்ளனர்.. திடீரென இல.கணேசனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதேபோல, ராமகோபாலனுக்கும் உடல்நலம் குன்றியுள்ளது.. 2 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிரமான சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்கள் உடல்நலம் பெற வேண்டும் என்று கி.வீரமணி ஒரு வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. அதில், "பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் உள்ளார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைகிறோம். அவர் விரைவில் நலமடைந்து மீண்டும் பொதுப் பணியைத் தொடரவேண்டும் என்ற நம் விழைவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கெனவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலனும் நலம் பெற்று மீண்டும் தம் பொதுவாழ்வைத் தொடரவேண்டும் என்றும் விரும்புகின்றோம்... கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவே கூடாது" என்று கூறியுள்ளார்.
பழுத்த அரசியல்வாதி.. நிறைந்த அனுபவம் கொண்ட நிதியமைச்சர்.. ஜனாதிபதியாக உயர்ந்து.. மறைந்த பிரணாப்!
இந்த கொரோனா எத்தனையோ பாடங்களை நமக்கு தினந்தோறும் கற்று தந்து வருகிறது.. தொற்று பாதிக்கப்பட்டு பல தலைவர்கள் நம்மை விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.. இது தமிழக மக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது.
இந்நிலையில், கொள்கை மாறுபாடு இருந்தாலும், சக நண்பர்கள், சக துறையை சேர்ந்தவர்கள், விரைவில் நலம் பெற வேண்டும் என்று வீரமணி போன்ற மூத்த தலைவர்கள் இப்படி வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது, இளைய தலைமுறையினர் கற்று கொள்ள வேண்டிய பாடம் ஆகும்.. அதுமட்டுமல்ல, அரசியல் நாகரீகம் இன்னமும் இந்த மண்ணில் மக்கி போய்விடவில்லை என்பதையும் இந்த அறிக்கை நிரூபித்துள்ளது.