வீண் வம்பை விலைக்கு வாங்குது மோடி அரசு.. இந்தி, சமஸ்கிருதம், நீட்டுக்கு எதிராக போராட்டம்.. வீரமணி
சென்னை: இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுக்கு எதிராக வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெறும் என வீரமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது அடிப்படையில் இந்துத்துவ மதவாதக் கோட்பாடுகளைக் கொண்டதாகும். ஒரு தேர்தல் அறிக்கையிலேயே (2019) ராமன் கோவில் கட்டுவோம் என்று அறிவிக்கப்படுகிறது அதுவும் மதச்சார்பற்ற அரசியல் சட்டம் உள்ள போது என்றால், அதன் பொருள் என்ன? ஆர்.எஸ்.எஸைத் தாயாகக் கொண்டதுதானே பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். வகுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் பி.ஜே.பி. அரசுக்கு உண்டு.
ஆர்.எஸ்.எஸைப் பொருத்தவரை இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் என்பதுதான் அதன் கொள்கை. குருஜி கோல்வால்கரின் 'பஞ்ச் ஆஃப் தாட்ஸ்' ('ஞானகங்கை') எனும் நூல் அதனைத்தான் குறிப்பிடுகிறது.அதேபோல, மாநிலங்களே இருக்கக்கூடாது - இந்தியா ஒற்றை நாடாகத்தான் (Unitary) இருக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் கோட்பாடாகும். அப்படியிருந்தால்தானே ஒற்றை நாடு, ஒற்றை கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்.எஸ்.எஸின் கோட்பாட்டை நிறைவேற்ற முடியும்.இந்தக் கண்ணோட்டத்தில்தான் மத்திய பி.ஜே.பி. அரசு மேற்கொண்டுள்ள இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைப் பார்க்கவேண்டும்.
கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேச அதிமுகவினருக்கு தடை.. ஈபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி!
திணிக்கும் மோடி அரசு
1937-1938 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநில பிரதமராக வந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் முதன்முதலில் இந்தியைத் திணித்தார். அப்பொழுதே அதனை எதிர்த்துத் தந்தை பெரியார் தலைமையில் சென்னை மாநிலமே போர்க்கொடி தூக்கியது.அப்பொழுது இலயோலா கல்லூரியில் பேசும்போது, சமஸ்கிருதத்தைப் படிப்படியாகக் கொண்டு வரவே முதற்கட்டமாக இந்தியைப் புகுத்துகிறேன் என்று சொன்னதையும் கணக்கில் கொண்டால், இப்பொழுது மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு சமஸ்கிருதத்தையும், இந்தியையும் ஒரே நேரத்தில் திணிக்க முயலுவதன் பின்னணியும், நோக்கமும் மிக மிக எளிதாகப் புரியும்.
ஜெர்மன் மொழி அகற்றம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நெடுங்காலமாக இருந்து வந்த ஜெர்மன் மொழியை அகற்றிவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை இந்த அரசு கொண்டு வரவில்லையா?
சமஸ்கிருதத்துக்கும், மக்களுக்கும் என்ன ஒட்டுறவு? எந்தக் காலகட்டத்திலுமே சமஸ்கிருதம் ஏட்டு மொழியாக இருந்து வந்திருக்கிறதே தவிர நாட்டு மக்கள் பேசும் மொழியாக, வீட்டு மொழியாக இருந்ததில்லையே! அப்படிப் பார்க்கப் போனால் இந்தியா முழுவதும் இருக்கும் பார்ப்பனர்கள் மத்தியிலே அவர்களின் தாய்மொழியான சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இருந்தால், சமஸ்கிருதம் பேசும் மக்கள் தொகை குறைந்தபட்சம் ஆறு கோடி என்று அரசு புள்ளி விவரத்தில் இடம்பெற்றிருக்கும். ஆனால், அரசு எடுத்த கணக்கின்படி இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை 24,821 அதாவது 0.1 விழுக்காடாகும்.
வீண் வம்பு
இந்தியையும் மூன்றாவது மொழியாகப் படிக்கவேண்டும் என்று சொல்லுவது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே சட்ட ரீதியாக ஆக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட நிலையில், 50 ஆண்டுகாலமாக உள்ள நிலை, மத்திய அரசு ஏன் வீண் வம்பை விலைக்கு வாங்க ஆசைப்படவேண்டும்?
யார் பலன்பெறுவார்கள்
போராடிப் போராடிப் பெற்ற சமுகநீதியின் ஆணிவேரை வீழ்த்தும் வகையில், ‘நீட்' என்னும் கொலைவாளினைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய பி.ஜே.பி. அரசு.
‘நீட்' தேர்வின் முடிவுகள் எவற்றைத் தெரிவிக்கின்றன? தாழ்த்தப்பட்டவர்கள் 20,009 பேர்களும், பிற்படுத்தப்பட்டவர்களில் 63,479 பேர்களும், உயர்ஜாதியினரில் 7,04,335 பேர்களும் தகுதி பெற்றுள்ளனர் என்கிற இந்தப் புள்ளி விவரம் போதாதா? ‘நீட்'டால் பாதிக்கப்படுவோர் யார்? பலன் பெறுவோர் யார் என்பதற்கு?
போராட்டம் அறிவிப்பு
எனவே சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, ‘நீட்' ஏற்பாடு இவற்றைக் கண்டிக்கும் வகையிலும், மத்திய அரசு இவற்றைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் 15.6.2019 சனியன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு எங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்தக் கருத்துள்ள அனைவரையும், கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கழகப் பொறுப்பாளர்கள், இந்தக் காலகட்டத்தில் நாம் ஆற்றவேண்டிய, முன்னெடுக்கவேண்டிய முக்கிய கடமையாகக் கருதி இவ்வார்ப்பாட்டத்தை மக்கள் போராட்டமாக எழுச்சியுடன் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னையில் கலி.பூங்குன்றன்
தஞ்சையில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன். சென்னையில் நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங்கேற்பார்.மற்ற மற்ற மாவட்டங்களில் எழுச்சியுடன் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்'' இவ்வாறு தனது அறிக்கையில் வீரமணி குறிப்பிட்டுள்ளார்.