பொண்ணு பாக்கலை.. கல்யாணம் ஆகலை.. ஆனா குழந்தைக்கு பெயர்.. ரஜினி- கமல் குறித்து அமைச்சர் கருத்து
சென்னை: ரஜினி- கமல் கூட்டணி என்பது, பெண் பார்க்காமல் கல்யாணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமமாகும் என அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இல்லத்திலிருந்து,10 லட்சம் மதிப்பிலான ஆயிரம் மூட்டை அரிசியை தூத்துக்குடி அடைக்கலபுரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் குழந்தைகளுக்கு 1000 மூட்டை அரிசி வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில் அதனை உடனடியாக நிறைவேற்றும் வகையில் இன்று புனித சூசை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
புதிய வரலாறு படைக்கும் வகையில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவித்த பின் கலந்து ஆலோசித்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். மேலும் பத்திரிகையாளர் பாதுகாப்பிற்கு வாரியம் அமைத்து, பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
கமல்ஹாசன் மூன்றாவது அணி உருவாக்குதல் குறித்து கேட்கிறீர்கள். 3 என்ன, நான்கு அணிகள் என எத்தனை அணிகள் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும். ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. ரஜினி கமல் கூட்டணி என்பது எப்படியிருக்கும் தெரியுமா.
பெண் பார்க்காமல் கல்யாணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு சமமாகும். படப்பிடிப்புத் தளங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நெறிமுறைகளை தமிழக முதலமைச்சரோடு ஆலோசித்த பின் அதற்கான விதிகள் வகுக்கப்படும் என குறிப்பிட்டார்.