"குரு".. அதிரடி திரைப்படமாக உருவாகும் காடுவெட்டியாரின் கதை.. தேர்தலுக்கான அஸ்திரமா.. பரபரக்கும் களம்
காடுவெட்டி குரு வாழ்க்கை சினிமாவாக எடுக்க போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: பாமகவுக்கு எதிரான அஸ்திரம் ஒன்று தயாராகி வருவது தெரிகிறது.. காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்க போகிறார்களாம்.. ஆனால் இதற்கு பின்னணியில் என்ன காரணம் உள்ளது என்பதுதான் இப்போதைய சந்தேகமே!
Recommended Video
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் சினிமாவாக வெளிவந்து வரவேற்பை பெற்றிருக்கின்றன.. அந்த வகையில், மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது... "மாவீரன் ஜெ குரு" என்று படத்துக்கு பேர் வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தை தமிழ்த்தாய் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதில் குரு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் நடிக்க இருக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அரியலூர், பெரம்பலூர், நெய்வேலி, பண்ருட்டி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடத்த போவதாகவும், படத்தை இளம் இயக்குனர் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
குருவின் சினிமா வெளிவருவது மகிழ்ச்சியே.. ஆனால் இந்த நேரத்தில் ஏன் படம் எடுக்க முனைகிறார்கள் என்பதுதான் சந்தேகமாக உள்ளது.. டாக்டர் ராமதாசின் வலது கரமாகவும், வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு.. வட மாவட்டங்களில் மிகப்பெரிய கட்சியான பாமகவின் மிக முக்கியமான தலைவராக இருந்தவர்.
தனது அதிரடியான பேச்சுகளால் வன்னிய இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருந்தவர் குரு. இவரது மரணம் ஜீரணிக்க முடியாத பெரிய இழப்பு.. இந்த மரணத்திற்கு பிறகு எத்தனையோ சலசலப்புகள், அதிருப்திகள் பாமக தரப்பில் குருவின் ஆதரவாளர்களுக்கு இருந்து வருகிறது.
அதேசமயம் குடும்ப பிரச்சனையும் குரு குடும்பத்தில் இருந்து வருகிறது... சில தினங்களுக்கு முன்பு வெட்டு குத்து வரை போய்விட்டது.. குருவின் குடும்பத்திற்கும், சின்னபிள்ளை குடும்பத்திற்கும் சொத்து பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது... இதையொட்டி முன்பகையும் இருந்து வந்த நிலையில்தான், குருவின் மகன், மருமகனை அரிவாளால் தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போதுகூட இதற்கு அரசியல் காரணம்தான் சொல்லப்பட்டது.
"உங்களை யார் அரசியலுக்கு வர சொன்னது" என்று கேட்டுக் கொண்டே அரிவாளால் கனலை வெட்டினாங்க.. இதுக்கெல்லாம் காரணம் அன்புமணி ராமதாஸ்" என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியானது: அமெரிக்கா திட்டவட்டம்!!
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வைத்து பார்த்தால், பாமகவுக்கு எதிராக குரு சம்பந்தப்பட்டவர்கள் ஏதோ ஐடியாவை வைத்துள்ளதாகவே தெரிகிறது.. அரசியலுக்கு வருவதை தடுப்பதாக இவர்கள் சொல்லி வந்த நிலையில், சினிமா படம் எடுத்து அதன்மூலம் குருவின் புகழை வெளி கொணர்வதாகவும் தெரிகிறது.. குரு மீதான எந்த காழ்ப்புணர்ச்சியையும், பாமக தரப்பில் இதுவரை தெரிவிக்காத பட்சத்தில், இந்த சினிமா படத்தை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள், எந்த அளவுக்கு ஆதரிப்பார்கள் என தெரியவில்லை.
மற்றொருபுறம், வேல்முருகனையும் இங்கே யோசிக்க வேண்டி உள்ளது.. குரு இறந்ததில் இருந்தே, அவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் வேல்முருகனுக்கு பலமாக இருந்து வருகிறார்கள்.. வேல்முருகனும் குரு ஆதரவாளர்கள் ஓட்டினை திமுக பக்கம் சாய்க்க முயன்றவரை முயற்சி எடுத்தார்.. இப்போதும் எடுத்து வருகிறார்.. அந்த வகையில், குருவின் சினிமா படமாவதில், வேல்முருகனின் ஆதரவும் இருக்குமோ என தெரியவில்லை.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போதைக்கு தமிழகத்தில் கொரோனா தாண்டவமாடி வருகிறது.. வரும் அக்டோபர், நவம்பரில் இதன் தொற்றின் தாக்கம், வீரியம் அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கையும் செய்யப்பட்டது.. அப்படி இருக்க, குருவின் சினிமாவை இப்போதே எடுக்க என்ன காரணம்? என்ன அவசரம்? என்ன நிர்ப்பந்தம் என்றும் தெரியவில்லை.
ஒருவேளை சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி குரு தரப்பு காய் நகர்த்த தொடங்கி உள்ளதோ என்ற சந்தேகமும் எழுகிறது.. ஆனால் எப்படி பார்த்தாலும் பாமகவுக்கு ஏதாவது ஒரு வகையில் சிக்கல் எழவே போகிறது.. அந்த சிக்கலையும் டாக்டர் ராமதாஸ் சாதுர்யமாக கையாள்வார் என்பதும் நிச்சயம்!