உதயநிதி ஸ்டாலினிடம் காடுவெட்டி குரு மகன் வைத்த 2 கோரிக்கை... சந்திப்பின் பின்னணி இது தான்..!
சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது தனது மாவீரன் மஞ்சள் படை சார்பில் 2 முக்கிய கோரிக்கைகளை உதயநிதியிடம் முன் வைத்திருக்கிறார் கனலரசன்.
உதயநிதி -கனலரசன் இடையேயான இந்த சந்திப்பை பாமக முகாம் ரசிக்கவில்லை போல் தெரிகிறது.
கனலரசன்
மறைந்த வன்னியர் சங்கத் தலைவரின் மகனும் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் தலைவருமான கனலரசன் ராமதாசுக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசியல் செய்து வருகிறார். தனக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தை வைத்து அரசியல் செய்து வரும் அவர், திடீரென திமுக முகாமில் நிகழ்த்திய சந்திப்பு பாமகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இட ஒதுக்கீடு
காடுவெட்டி குருவுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும், வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற இரட்டை கோரிக்கையை உதயநிதியிடம் முன் வைத்திருக்கிறார் கனலரசன். உங்கள் கோரிக்கை குறித்து அப்பாவிடம் கொண்டுசெல்கிறேன் எனக் கனலரசனிடம் கூறியிருக்கிறார் உதயநிதி. இதனடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தனது அமைப்பின் ஆதரவை தருவது என்றும் கனலரசன் முடிவெடுத்திருக்கிறார்.
பாமக பிடிவாதம்
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவருவதற்கான பணிகள் ஒரு புறம் நடைபெற்று வரும் சூழலில், கனலரசுடனான சந்திப்பும் நிகழ்ந்திருக்கிறது. இதனிடையே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் திமுக ஆதரவு வட்டத்தில் இருந்து வருகிறார். திமுகவின் மூவ்களை வைத்து பார்த்தால் வடமாவட்டங்களை மொத்தமாக வாரி சுருட்டி வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாஜக அதிர்ச்சி
மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் தலைவரும், குருவின் மகனுமான கனலரசனை பாஜக பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில் அது தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் பாஜக தரப்பு ஏமாற்றம் அடைந்துள்ளது. இதனிடையே ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கனலரசன் சந்தித்து பேசிய போது அவர் பாஜகவில் இணைவதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.