காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல.. ராமதாஸ், அன்புமணி மீது குடும்பத்தினர் சரமாரி புகார்
சென்னை: காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல என அவரது குடும்பத்தினர் பகீர் புகாரை தெரிவித்துள்ளனர்.
வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவில் பாமகவின் பங்கு இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறி வந்தனர்.
மேலும் தருமபுரியில் அன்புமணி போட்டியிட்டால் அவரை தோற்கடிப்போம் என குரு குடும்பத்தினர் சூளுரைத்தனர். இந்த நிலையில் குருவின் தாய் , மகன் கனலரசன், சகோதரி மீனாட்சி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதல்முறையாக கருணாநிதி இல்லாத நேர்காணல்.. முதல்முறையாக பங்கேற்ற கனிமொழி.. இன்னும் சுவாரஸ்யங்கள் இதோ
குடும்பம்
இந்த நிலையில் அவர்கள் கூறுகையில் குருவின் மரணம் இயற்கையானதல்ல. பாமக தலைமையை இருந்த எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது.
இறந்துவிடுவார்
பாமக தலைமைக்கு வன்னியர் சமூகம் உரிய பதிலை சொல்லும். குருவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என நாங்கள் கூறிய போது கூட எதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் இறந்துவிடுவார் என எங்களிடம் தெரிவித்தனர்.
நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம்
குருவுக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். குருவை சூழ்நிலைக் கைதியாக பாமகவினர் வைத்துள்ளனர். அன்புமணியின் வளர்ச்சிக்கு குரு தடையாக இருப்பதாகவே கருதினர்.
குருவால் விமர்சிக்கப்பட்ட கட்சி
குரு விமர்சித்த கட்சியிடம் பூங்கொத்து கொடுத்து பாமக உறவாடியது பாமக. பிறரை விமர்சித்து பேசுமாறு குருவை தூண்டிவிட்டு அவரை பாமக பலருக்கு எதிரியாக்கியது. எங்களுக்கு உரிய பாதுகாப்பை போலீஸார் தர வேண்டும் என்று சரமாரி குற்றச்சாட்டுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் மீதும் அன்புமணி மீது குரு குடும்பத்தினர் முன்வைத்தனர்.