பூம்புகாரில் களமிறங்கும் காளியம்மாள்.. தமிழகம் முழுவதும் பிரச்சார பீரங்கியாகிறார்!.. யார் இவர்?
சென்னை: லோக்சபா தேர்தலை போல் சட்டசபைத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் காளியம்மாள் கலக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
நாம் தமிழர் கட்சி கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இருந்து போட்டியிடுகிறது. தனித்து தேர்தலை சந்தித்த இக்கட்சி 1.07 சதவீதம் வாக்குகளை பெற்றது. இவர்களின் முழக்கம் தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும். லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான அரசு உருவாக வேண்டும், தமிழர்கள் நலன் காக்கப்பட வேண்டும். இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்டவை இக்கட்சியின் லட்சியமாகும்.
அது போல் பெண்களுக்கு சமஉரிமை என்பதை இவர்கள் வேட்பாளர்கள் தேர்விலேயே கொடுக்கிறார்கள். மொத்தம் உள்ள தொகுதியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கிறார்கள். அந்த வகையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் இந்த கட்சி 117 ஆண், 117 பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.
அறிமுக விழா
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வேட்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பூம்புகார் தொகுதியில் காளியம்மாளும் களம் காண்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல் சட்டசபை தேர்தலிலும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் காளியம்மாள்.
வடசென்னை
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் 60,515 வாக்குகளை அசால்ட்டாக பெற்றார். இவரது வாக்கு சதவீதம் 6.33 ஆகும். யார் இவர்? சிறந்த பேச்சாளரான காளியம்மாளின் சொந்த ஊர் நாகப்பட்டினமாகும். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். பிகாம் பட்டதாரியாவார். இவர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கொண்டிருந்த போது நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைத்ததால் அக்கட்சியின் இணைந்தார்.
5 ஆண்டுகள்
மீனவப் பெண்ணான இவர் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக அச்சமூக மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பூம்புகார் சட்டசபைத் தேர்தலில் இவர் போட்டியிடுகிறார். இவர் போட்டியிடுவது மட்டுமல்லாமல் பிரச்சார பீரங்கியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் அவரது சுற்றுப்பயண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
காளியம்மாளுக்கு பேச அனுமதி
தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை பற்றி பேச காளியம்மாளுக்கு சீமான் அனுமதி அளித்துள்ளார். இதனால் இவரது பேச்சு இந்த முறை களைகட்டும் என்றே தெரிகிறது. கடந்த தேர்தலை போல் காளியம்மாள் இந்த தேர்தலிலும் அவர் ஒரு கலக்கு கலக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.