செந்தில் பாலாஜி திமுகவுக்கு போனாலும் போனார்.. தாவ காத்திருக்கும் விக்கெட்கள்.. அடுத்தது யார்?
Recommended Video
சென்னை: செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றாலும் சென்றார், அமமுகவிலிருந்து அடுத்து யார் தாவ போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினகரனின் வலது, இடது என அனைத்துமாக இருந்த செந்தில் பாலாஜி அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார். இதற்கு காரணமாக தினகரன் அமமுகவுக்கு ஒரு பைசாவையும் செலவு செய்வதில்லையாம். முழுக்க முழுக்க அக்கட்சியில் உள்ளவர்களே செலவு செய்யும் நிலை ஏற்பட்டது.
இதனால் சேர்த்து வைத்த காசு இப்படி அழிகிறதே என்ற மனஉளைச்சலில் செந்தில் பாலாஜி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிச்சிக்கிட்டு திமுக பக்கம் தாவிவிட்டார். இதே நிலையில்தான் மற்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
மறுப்பு
மேலும் தினகரன் பக்கம் இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்களும் இதே விரக்தியில் உள்ளனராம். இந்த தகவல்கள் காற்று வாக்கில் கசியவே அடுத்த விக்கெட் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பழனியப்பன் பெயர் அடிப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்தார்.
பிரபு நிலைப்பாடு என்ன
அது போல் தங்கதமிழ்ச் செல்வன் பெயரும் அடிபட்டுள்ளது. சசிகலா மற்றும் தினகரனின் விசுவாசி என்றும் அவர்களை விட்டு கட்சி தாவமாட்டேன் என்றும் ஆணித்தரமாக கூறிவிட்டார். இதையடுத்து அனைவரின் பார்வையும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் பக்கம் திரும்பியுள்ளது.
நம்ப வேண்டாம்
இவரும் பணச்செலவிலிருந்து தப்ப தினகரன் கட்சியை விட்டு விலகலாம் என்ற முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் கேட்டபோது கடந்த சில நாட்களாக நான் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.
ரியாக்ஷன்
நான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உண்மையான விசுவாசியாகவும், தொண்டனாகவும் செயலாற்றுவேன். அணி மாறப்போவதாக வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளராக சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் எப்போது ஆகிறார்களோ அப்போது தான் அ.தி.மு.க.வும்- அ.ம.மு.க.வும் இணையும் என்றார். அடடா வடை போச்சே என எதிர்க்கட்சிகள் ரியாக்ஷன் கொடுக்கின்றனர்.