தூக்கி விளையாடிய கையால்.. 16 வயசு பொண்ணை.. எம்எல்ஏ செய்தது தப்பில்லையா.. குமுறும் தந்தை
காதலியை திருமணம் செய்தது குறித்து எம்எல்ஏ பிரபு விளக்கம் தந்துள்ளார்
சென்னை: "சவுந்தர்யாவை மனசார காதலிச்சேன்.. முறைப்படி பெண் கேட்டேன்.. தரல.. சவுந்தர்யாவுக்கும் ஆசாபாசம் காட்டி மயக்கி கல்யாணம் செய்யலை.. குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை" என்று எம்எல்ஏ பிரபு தெளிவுபடுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பெண்ணின் தந்தை ஐகோர்ட்டை நாடி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு... இவர் சவுந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. அவர் ஒரு கல்லூரி மாணவி.
இவரை நேற்று சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் பிரபு.. தியாகதுருகத்தில் உள்ள அவரது வீட்டில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் இந்த கல்யாணம் நடந்து முடிந்தது.
இதையடுத்து எம்எல்ஏ பிரபு - சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால், உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இந்த கல்யாணத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
ஆனால், இந்த கல்யாணத்துக்கு சவுந்தர்யா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. குறிப்பாக அவரது அப்பா சுவாமிநாதன் தீக்குளிக்கவே முயற்சி செய்துள்ளார்.. நேற்று விடிகாலை 4 மணிக்கு கல்யாணம் என்றால், 7 மணிக்கு பெண்ணின் அப்பா சுவாமிநாதன், எம்எல்ஏ பிரபு வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.. இதற்கு பிறகு அவரை தடுத்து நிறுத்திய போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
இதற்கு பிறகு சுவாமிநாதன் நம்முடைய "ஒன் இந்தியா தமிழுக்கு" அளித்த பிரத்யேக பேட்டியில், "13 வருஷமா பிரபுவை தெரியும்.. என் வீட்டுக்கும் வருவார்.. என் பொண்ணுக்கு இப்போதான் 19 வயசு ஆகுது.. பிரபுக்கு 39 வயசாகுது. 10 வருஷமா என் பொண்ணை லவ் பண்றதாக சொல்றார்.. அப்படின்னா 9 வயசுலேயே என் பொண்ணை லவ் பண்ணாரா? 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? அதனால்தான் பெட்ரோலை ஊற்றிக்கிட்டு தற்கொலைக்கு முயன்றேன்.. நான் சாதி பார்க்கிறவன் இல்லை.. மதம் பார்க்கிறவன் இல்லை.. காதலுக்கும் நான் எதிரி கிடையாது... ஆனால், 20 வயசு அதிகமான நபருக்கு எப்படி என் பொண்ணை தர்றது?" என்று நம்மிடம் கண்ணீர் மல்க சொல்லி இருந்தார்.
இதனிடையே, சென்னை ஐகோர்ட்டில், சாமிநாதன் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது மகள் சவுந்தர்யாவை எம்எல்ஏ பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாகவும், இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், தனது மகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சூழலில்தான், மணமகன் பிரபு அதிரடியாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அதில், "எங்க கல்யாணத்தை பத்தி நிறைய வதந்திகள் வந்துட்டு இருக்கு.. நான் சவுந்தர்யாவை கடத்தி வந்துட்டதாகவும், அவங்க வீட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வதந்தி பரவுகிறது.. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.. நாங்கள் சில மாதங்களாக காதலித்து வந்தோம்.
2 பேரும் காதலித்து வந்ததால், கல்யாணம் செய்துக்க விரும்பி, சவுந்தர்யாவின் வீட்டில் முறைப்படி பெண் கேட்டேன்.. அவர்கள் தர மறுத்ததால், என்னுடைய பெற்றோர் முன்னிலையில், அவர்கள் சம்மதத்துடன் கல்யாணம் செய்துகொண்டோம்.. மத்தபடி, சவுந்தர்யாவை கடத்திட்டு வந்து வற்புறுத்தி கல்யாணம் செய்யல.. அப்படி ஒரு சம்பவமும் நடக்கல.. இவங்க குடும்பத்துக்கும் நான் கொலை மிரட்டல் விடுக்கல.. சவுந்தர்யாவுக்கும் ஆசாபாசம் காட்டி மயக்கி கல்யாணம் செய்யலை" என்று தெளிவுபடுத்தி இருந்தார்.
இதில், யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.. பிரபு 4 மாதம்தான் காதலித்தோம் என்கிறார்.. சுவாமிநாதன் 13 வருட பழக்கம் என்றார்.. இவர்கள் காதலித்ததே 9 மாதமாகத்தான் தெரியும் என்று நேற்று நம்மிடம் சொல்லி இருந்தார்.
அதேபோல, பெண்ணை கடத்திவிட்டார்கள் என்று சுவாமிநாதன் சொல்கிறார்.. விரும்பிதான் கல்யாணம் செய்தோம் என்று பிரபு சொல்கிறார்.. ஆனால், வயது வித்தியாசம் பற்றி பிரபு எதையும் அந்த வீடியோவில் சொல்லவில்லை. இப்போது இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளதால், முடிவு என்னாகும் என்று தெரியவில்லை.. ஒருவேளை இந்த வீடியோ கோர்ட்டில் ஆதாரமாகவும் சமர்ப்பிக்கப்படலாம் என்று தெரிகிறது.
எம்எல்ஏ பிரபு அளித்த வீடியோ விளக்கத்தை பற்றி சுவாமிநாதனிடம் நாம் மறுபடியும் தொடர்பு கொண்டு பேசினோம்.. அப்போது அவர் சொன்னதாவது: "4 மாசம்தான் காதல் பண்றேன்னு சொல்றாரே.. இது கொரோனா காலம்.. எல்லாரும் 6, 7, மாசமா லாக்டவுனில் இருக்கிறோம்.. காலேஜும் பிப்ரவரியில் இருந்தே லீவு விட்டுட்டாங்க.. இவர் எங்க போயி என் பொண்ணை பார்த்து லவ் பண்ணினார்?
லவ் என்றால் என்ன? ஒருத்தரை ஒருத்தர் நேருக்கு நேராக சந்தித்து, மனம்விட்டு பேசி, குறைநிறைகளை விவாரித்து, நெருக்கமான உறவு ஒருத்தருக்கொருத்தர் வந்த பிறகே தான் கல்யாணம் என்ற முடிவுக்குள்ளேயே நுழைய முடியும்.. என் பொண்ணு இத்தனை காலமும் வீட்டுக்குள்ளேயே இருக்கு.. இவர் எப்போ வந்து என் பொண்ணை பார்த்தார்? பேசினார்?
ஒரு டிவியில பேட்டி தர்றார், 3 வருஷமா காதலிச்சோம்..ன்னு.. அவர் சொல்ற கணக்குபடியே பார்த்தாலும், அப்போ என் பொண்ணுக்கு 16 வயசுதான்.. 16 வயசு பொண்ணை மயக்கி காதல் வலையில் விழ வைக்கிறது தப்பு இல்லையா? என் பொண்ணை சின்ன வயசில இருந்து தூக்கி வளர்த்தவர். இதான் ஜீரணிக்க முடியல.
மேஜர்-ன்னு ஈஸியா சொல்லிடறாங்க.. ஆனால் 18-20 வயசுவரை பிள்ளைகளுக்கு எதுவுமே விவரம் தெரியறது இல்லை.. அது ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி.. மனோரீதியாக வலு இருக்காது... இந்த வயதில் சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் இருக்காது.. சில ஆண்கள் இளம்பெண்களை 16, 17 வயசிலேயே காதல் என்ற பெயரில் ஆசை காட்டி, வலையில் விழ வெச்சிடறாங்க.. விவரம் அறியாத பெண்களுக்கும், இதன் ஆபத்து தெரிவதில்லை.
இந்த பிரபு எங்க குடும்பத்தில் ஒருத்தரா பழகினார்.. 2014-ல் ஒருமுறை கோயில் விசேஷத்துல, இவரை என் மகனாக தத்தெடுத்தேன்.. இது அவருக்கே நல்லா தெரியும்.. ஒருநாள் காலேஜில் இருந்து என் பொண்ணு வரும்போது, பஸ்சில் வந்திடறேன்னு சொன்னாள்.. அப்பவே எனக்கு டவுட் வந்தது.. ஏன்னு கேட்டதுக்கு, பிரண்ட்ஸ்கூட வரேன்ப்பான்னு சொன்னாள்.
அதனால், நான் பஸ் ஸ்டாண்ட் போய் நின்னேன்.. அப்பதான், பிரபு என் பொண்ணை காரில் வந்து இறக்கிவிட்டு போறதை பார்த்தேன்.. அப்போதான் இவங்க லவ் மேட்டர் எனக்கு தெரியவந்தது. கோர்ட்டில் மனு போட்டிருக்கேன்.. எப்போ விசாரணைக்கு வரும்னு தெரியாது.. ஆனால் என் பொண்ணை எனக்கு திரும்ப ஒப்படைக்கும்படி கேட்க போறேன்" என்று நம்மிடம் சொன்னார்.