"என்னை அப்பான்னு கூப்பிடுவார்.. என் மகள் யாரு.. தங்கச்சியை கல்யாணம் செய்யலாமா".. குருக்கள் கேள்வி!
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, என் மகளை மயக்கிட்டார் என சுவாமிநாதன் வேதனையுடன் கூறுகிறார்
சென்னை: "என்னை பிரபு எப்பவுமே அப்பான்னு தான் கூப்பிடுவார்.. என் மனைவியை அம்மான்னு கூப்பிடுவார்.. அப்படின்னா என் மகள் இவருக்கு தங்கச்சிதானே? தூக்கி வளர்ந்த குழந்தையை கல்யாணம் செய்யலாமா? இன்னைக்கு என் பொண்ணு என் முகத்தைகூட பார்க்கலை.. அது இன்னும் எனக்கு வேதனையா இருக்கு.. எங்க இருந்தாலும் நல்லா இரும்மான்னு மட்டும் சொல்லிட்டேன்" என்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு விவகாரத்தில், சவுந்தர்யாவின் அப்பா சாமிநாதன் குருக்கள் நம்மிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்.. 3 நாளைக்கு முன்பு அவரை சாதி மறுப்பு திருமணமும் செய்து கொண்டார்.. ஆனால், இந்த கல்யாணத்துக்கு சவுந்தர்யா குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.. சவுந்தர்யாவின் அப்பா குருக்கள் சுவாமிநாதன், இதை தாங்கி கொள்ள முடியாமல், தீக்குளிக்கவே முயற்சி செய்தார்.
மேலும் சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்ததில், சவுந்தர்யாவின் விருப்பத்தில் எம்எல்ஏ பிரவுடனேயே செல்லலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம்.. பெண்ணும், தந்தையும் நேரில் ஆஜராக ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சுவாமிநாதன்
இதையடுத்து, பெண்ணின் தந்தை குருக்கள் சுவாமிநாதனிடம் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.. அப்போது அவர் வேதனையுடன் சொன்னதாவது: "ஒரு எம்எல்ஏவுக்கு காதல் வரக்கூடாதுன்னு நான் சொல்லல.. ஆனால், என் 9, 10 வயசு தூக்கி வளர்த்த குழந்தையை அவர் கல்யாணம் பண்ணினதுதான் எனக்கு ஒரே சங்கடம். தங்கையை, மகளை கல்யாணம் செய்ற மாதிரிதானே இது?
15 வயசு
4 வருஷமா காதலிச்சோம்..ன்னு.. சொல்றாரே.. அப்போ என் பொண்ணுக்கு 15 வயசுதான்.. 15 வயசு குழந்தையை மயக்கி காதல் வலையில் விழ வைக்கிறது தப்பு இல்லையா? மேஜர்-ன்னு ஈஸியா சொல்லிடறாங்க.. ஆனால் 18-20 வயசுவரை பிள்ளைகளுக்கு எதுவுமே விவரம் தெரியறது இல்லை. மனோரீதியாக வலு இருக்காது... இந்த வயதில் சிந்தித்து முடிவு எடுக்கும் திறன் இருக்காது.. சில ஆண்கள் இளம்பெண்களை 16, 17 வயசிலேயே காதல் என்ற பெயரில் ஆசை காட்டி, வலையில் விழ வெச்சிடறாங்க.. விவரம் அறியாத பெண்களுக்கும், இதன் ஆபத்து தெரிவதில்லை.
மேஜர்
பெரியவங்களே நாம குடும்பத்தில் ஒரு பக்கம் மனைவி, ஒரு பக்கம் அம்மா என்று எந்த பக்கம் சாய்வது என்று முடிவெடுக்க முடியாமல் தவிக்கும்போது, 19 வயசு பெண்ணுக்கு என்ன தெரியும்? அப்படி முடிவெடுப்பது எந்தவகையில் சரியாக இருக்கும்?ன்னு தெரியல. மேஜர் என்கிற ஒரு விஷயத்தை மட்டுமே வெச்சு இதை அணுகினதால், என் பேச்சு எதுவுமே எடுபடல. பொண்ணை வேணும்னா தனியா கூப்பிட்டு பேசுறதா இருந்தால் பேசுங்க, நானும் சொல்லி இருக்கேன்னு நீதிபதி சொன்னார்.. அதனால், என் பொண்ணுகிட்ட தனியா பேசினேன்..
வேதனை
அரை மணி நேரம் பேசினேன்.. என் வலியெல்லாம் சொன்னேன்.. எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன், அவளுடைய அம்மா உடல்நிலை எல்லாத்தையும் எடுத்து சொன்னேன். ஆனா, அவள் என் முகத்தைகூட நிமிர்ந்து பார்க்கல.. அது இன்னும் வேதனையை தந்துடுச்சு. கீழே குனிந்து கொண்டு, நான் சொன்னதை மட்டும் அலட்சியமாக காதில் வாங்கி கொண்டு நின்றதை என்னால ஜீரணிக்கவே முடியல.. அந்த அளவுக்கு சொல்லி கொடுத்து, கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு மட்டும் தெரிந்தது.
சட்ட நிபுணர்கள்
என்ன சொன்னாலும் காதுல ஏறுகிற மாதிரி நிலைமை இல்லைன்னும் புரிஞ்சு போச்சு.. அதனால, இனி சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிக்கலாம்னு இருக்கேன். மேஜர் என்பதாலேயே மட்டும் 18 வயதில் எல்லா விவரங்களும் தெரிந்துவிடுவதில்லை என்பதையும், ஒருவேளை காதல் திருமணம் செய்தாலும் பெற்றவர்களின் அனுமதியுடனேயே செய்ய வேண்டும் என்று சட்டத்தை வலுவாக்க வேண்டும் என்றும் என் பணிவான இந்த 2 கோரிக்கைகளையும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
கோரிக்கைகள்
ஏன்னா, இது என் வேதனை மட்டுமில்லை.. பெண்ணை ஆசை ஆசையாக பெத்து வளர்த்து ஏமாந்து போன பல பெற்றோர்களின் வலி.. அவர்கள் சார்பாகவும்தான் இதை கேட்கலாம் என்று இருக்கேன்.. ஆனால் ஒன்று, எங்க இருந்தாலும் நீ நல்லா இருக்கணும், நல்லா இரும்மான்னு மட்டும் சொல்லிட்டு வந்துட்டேன்" என்று வேதனையுடன் சொன்னார்.