இதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏ பிரபு சந்தித்து பேசினார்
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி அதிமுகவில் தான் தொடருவதை உறுதிப்படுத்தி விட்டார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் வி.டி.கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேர் மீது சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
அதனால் இந்த 3 பேரின் எம்எல்ஏ பதவிக்கும் ஆபத்து ஏற்படும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் 3 பேரும் செய்தியாளர்களிடம் பேசினர்.
வாக்கெடுப்பு
அப்போது, "நாங்கள் 3 பேரும் கொறடா உத்தரவை எதிர்த்து, எப்பவுமே ஓட்டு போட்டதில்லை. இதுவரை சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில், அதிமுகவுக்குத்தான் ஆதரவாக ஓட்டு போட்டுள்ளோம். நாங்கள் எந்த கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. சட்டசபையில் எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் அதிமுக கொறடா உத்தரவின்படியே செயல்படுவோம்" என்று கூறியிருந்தார்.
சந்தேகம்
இப்படி இவர்கள் 3 பேரும் அதிமுகவுக்குதான் தங்கள் ஆதரவு என்று சொன்னபோதிலும், என்னமோ ஆளும் தரப்புக்கு ஒரு சந்தேகம் இவர்கள் மீது இருந்து கொண்டே இருந்தது. அதனால்தான் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்குகூட அழைப்பு விடுக்கவில்லை.
முக ஸ்டாலின்
இதனிடையே, முக ஸ்டாலின் சட்டசபை நடக்கும்போதே ஆட்சி கவிழும் என்று ஒரு பஞ்ச் வைத்து பேசினார். இதையடுத்துதான் எடப்பாடியாருக்கு ஒரு கலக்கம் வந்துவிட்டது. எதற்காக ஸ்டாலின் இப்படி பேச வேண்டும், ஒருவேளை இந்த ஆதரவு எம்எல்ஏக்களை திமுக பக்கம் இழுக்க போகிறாரோ என்ற கிலி எடப்பாடியாருக்கு எழுந்ததாகவும், அதன்காரணமாகவே சம்பந்தப்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரையும் அழைத்து பேசியதாகவும் சொல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சி பிரபு
"அந்த பக்கம் உதவி செய்துட மாட்டீங்களே, கடைசிவரை அதிமுகவுக்குதானே ஆதரவு?" என்று அவர்களிடம் உறுதி செய்து கொண்ட பிறகே 3 பேரையும் இணைத்துக் கொள்ள முடிவாகியதாக தகவல்கள் கசிந்தன. பின்னர், சில தினங்களுக்கு முன்பு அறந்தாங்கி ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் முதல்வரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி பிரபு மட்டும் இதுவரை முதல்வரை சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில், அவரும் இன்று முதல்வரை சந்தித்து பேசியுள்ளார்.
ஆதரவு
எதற்கான சந்திப்பு இது என்று நமக்கு தெரியாவிட்டாலும், "நான் அதிமுகவில்தான் இருக்கிறேன். நான் யாருக்கும் ஆதரவு இல்லை, யார் கூப்பிட்டாலும் போகவும் மாட்டேன்" என்பதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆக மொத்தம் அன்று "அதிருப்தி" எம்எல்ஏக்கள் இன்று "ஆதரவு" எம்எல்ஏக்களாகி விட்டனர். இதன் மூலம் தினகரனிடம் தற்போது ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அவரிடம் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளார்.. அது சாட்சாத் அவரேதான்!